பதிவு செய்த நாள்
01 ஜூன்2015
01:19
தொழில்முனைவோராக முத்திரை பதித்த முன்னோடிகள் எல்லாருமே நம்மை போன்றவர்கள் தான். ஆனால், அவர்களின் அணுகுமுறையில் தான் வேறுபாடு இருக்கிறது. அந்த அணுகுமுறைகளில் முக்கியமானதாக தொழில் வல்லுனர்கள் அடையாளம் காட்டுவது மேற்கண்ட இவற்றை தான்.
1. தொடர் முதலீடு:தீவிர தொழில்முனைவோர் தொடர்ந்து முதலீட்டிற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் எதையும் முடிவாக கருதுவதில்லை. அவர்கள் சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்து, லாபத்தை மறு முதலீடு செய்கின்றனர்.
2. பிரச்னையில் தீர்வுகள்:தொழில்முனைவோர் பிரச்னைகளை கண்டு ஒடுங்கிப்போவதில்லை; அஞ்சுவதும் இல்லை. தடைகள் தாண்டுவதற்கு என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. எனவே பிரச்னைகள் வரும் போது அவற்றை அவர்கள் வாய்ப்புகளாகவே பார்க்கின்றனர். அவர்கள் எப்போதுமே முன்னேற்றத்திற்கான தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
3.சுயதிறன் வளர்ப்பு:தொழில்முனைவோர் எப்போதும் தங்கள் திறனில் முதலீடு செய்து அதை மேம்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
4.சொத்து மதிப்பு :தொழில்முனைவோர் தங்கள் நிறுவனத்தின் உரிமையை காத்து, அதன் மதிப்பை உயர்த்தும் வகையில், எதிர்கால நோக்கில் நீண்டகால முதலீடு செய்கின்றனர்.
5.பலத்தில் கவனம்:வெற்றிகரமான தொழில் முனைவோர் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்திருக்கின்றனர். தங்கள் பலத்தில் கவனம் செலுத்தி பலவீனமான விஷயங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
பொருளாதார செய்திகள்
இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி 7.3 சதவீதம்
2014 – 15ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.3 சதவீதமாக இருக்கிறது.மார்ச் வரையிலான காலாண்டில் இது, 7.5 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை மிஞ்சக்கூடியதாக இருக்கும் என, ஐ.நா.,வின் அறிக்கை சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சி உயர்ந்துள்ளது. இந்த ஆண்டும் வளர்ச்சி தொடரும் என நம்பிக்கை கொடுத்தாலும், விவசாய துறையின் வளர்ச்சி 0.2 சதவீதமாக இருப்பது கவலை அளிக்கிறது.
இ.பி.எப்.,யில் கோரப்படாமல் ரூ.27,000 கோடி
தொழிலாளர் சேம நல நிதியில்(இ.பி.எப்.,) ரூ.27,000 கோடி உரியவர்களால் கோரப்படாமல் இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதை தெரிவித்த அமைச்சர் இந்த நிதியை தொழிலாளர் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டங்கள் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார். இ.பி.எப்., நிதியில் தற்போது 8.62 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வார வலைதளம்
http://indianmoney.com
முதலீடு தொடர்பாக உங்கள் மனதில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறதா? இந்தியன் மணி இணையதளத்தில் உங்கள் கேள்விகளுக்கான விளக்கம் காத்திருக்கிறது. இந்த இணையதளம் நிதி சேவைக்கான உதவி மையமாக செயல்படுகிறது. சேமிப்பு, கடன் வசதி, முதலீடு, வரி என்று நிதித்துறை சார்ந்த விஷயங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுனர்கள் மூலம் விளக்கம் அளிக்கிறது இந்த தளம்.இந்த தளத்தில் விளக்கத்தை பெறுவதும் சுலபம் தான். தளத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் அதன் வல்லுனர்கள் உங்களை தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை வழங்குவர் என, இந்த தளம் தெரிவிக்கிறது.
நிதி அகராதி
மார்கெட் கேபிடலைசேஷன்-Market Capitalisationஒரு நிறுவனத்தின் மதிப்பை அளவிட, பல வழிகள் இருக்கின்றன. விற்பனை,வருவாய், லாபம், வர்த்தக அளவு என, பல அம்சங்களை கொண்டு நிறுவனங்களை மதிப்பிடலாம். இவற்றில் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் மதிப்பே மார்கெட் கேபிடலைசேஷன் என்று குறிப்பிடப்படுகிறது.
சுருக்கமாக, ‘மார்கெட் கேப்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. அதாவது சந்தை மதிப்பு. நிறுவன பங்கு ஒன்றின் தற்போதைய விலையை கொண்டு அதன் மொத்த பங்கையும் பெருக்கும் போது வரும் தொகையே, நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|