பதிவு செய்த நாள்
12 பிப்2016
10:49
தங்கம் வாங்கும் போது, 'பான் கார்டு' நகல் பெறும் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நகை கடைகள், நேற்று மூடப்பட்டதால், 500 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகளில், தினமும் சராசரியாக, 1,000 - 1,200 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, 'இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், தங்க நகை வாங்குவோரிடம், பான் கார்டு நகல் பெற வேண்டும்' என, 2015ல் அறிவித்தது. இது, ஜன., மாதம் முதல் அமலுக்கு வந்தது.
தொழிற்கூடங்களும் மூடல்: ஆனால், நகை வாங்குவோர், பான் கார்டு நகல் வழங்கமறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்கம் விற்பனை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பான் கார்டு நகல் பெறும் அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நகை கடைகள், நேற்று முழுவதும் மூடப்பட்டன. இதற்கு ஆதரவு தெரிவித்து, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிற்கூடங்களும் செயல்படவில்லை.இதனால், தங்கம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களில், 500 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பால், தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், தங்கம் வாங்கும் போது, பான் கார்டு நகல் பெறுவதை மாற்றி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அமல்படுத்தக் கோரி, நகை கடைகளை மூடினோம். இந்த போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது.எங்கள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, பட்ஜெட்டில் புதிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|