பதிவு செய்த நாள்
20 பிப்2016
15:57
மதுரை:''சீனா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியா 7 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது,'' என, மதுரையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு, யங் இந்தியன்ஸ் சார்பில் நடந்த கருத்தரங்கில் மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டார்.கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கருமுத்து டி.கண்ணன் வரவேற்றார். சேர்மன் வாசு தலைமை வகித்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியதாவது: உலகளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. சீனாவில் கூட பொருளாதார பிரச்னை; பண மதிப்பு குறைந்து விட்டது. இந்நிலையிலும் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. இதை உலக வங்கி, பன்னாட்டு நிதி ஆணையம் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலை நீடித்தால் 8 சதவீத வளர்ச்சியை எட்டும். சீனா மூன்று ஆண்டுகளில் அதிக உற்பத்தி செய்து ஓராண்டிற்கு ஏற்றுமதி செய்ய தேவையான பொருட்களை வைத்துள்ளது. இதனால் விலை மலிவாக வழங்க நடவடிக்கை எடுக்கிறது. அதனுடன் இந்திய உற்பத்தியாளர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது.
தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளான தேசிய நெடுஞ்சாலைகள், தொழில் வழித்தடங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதனால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.பெங்களூரு-மும்பை, மும்பைடில்லி, கோல்கட்டா -விசாகபட்டினம், விசாகபட்டினம்-சென்னை தொழில் வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. விசாகபட்டினம்-சென்னை வழித்தடம் துாத்துக்குடி வரை விரிவுப்படுத்தப்படுகிறது.
நாட்டில் 3.6 கோடி சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன. எட்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆறாயிரம் பொருட்கள் சிறு தொழில்கள் மூலம் உற்பத்தியாகின்றன. ஏற்றுமதியில் 40 சதவீதம் வரை, சிறு தொழில்கள் பங்கு வகிக்கின்றன. குறைபாடு இல்லாத வகையில் பொருட்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரம் அதிகரித்துள்ளது. தொழில் முனைவோருக்காக சிட்பி, மேக்இன் இந்தியா மற்றும் முத்ராவங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது என்றார்.
கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கே.எஸ்.பரத், துணை தலைவர் ரமேஷ் க்யாமல், நிர்வாகி சுந்தர், துணை தலைவர் அன்புக்கனி, டிலோட்டி இந்தியா இயக்குனர் குமார் மற்றும் பலர் பேசினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|