பதிவு செய்த நாள்
15 ஏப்2016
07:26
மும்பை : ‘‘சிமென்ட் துறை, பல்வேறு சவால்களை சந்தித்து வருகிற போதிலும், அடுத்த, 3 – 5 ஆண்டுகளில், உள்நாட்டில் சிமென்ட் தேவை, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும்,’’ என, ஏ.சி.சி., சிமென்ட் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான ஹரிஷ் பதாமி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற, ஏ.சி.சி., நிறுவனத்தின், 80ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த, 2015ம் ஆண்டு, சிமென்ட் துறை கடுமையான சவால்களை சந்தித்தது. சிமென்ட் விலையில் ஏற்பட்ட சரிவு, தேவைப்பாடு குறைந்தது, உபரி கையிருப்பு என, பல்வேறு இடர்பாடுகளை, சிமென்ட் நிறுவனங்கள் எதிர்கொண்டன. ஒட்டுமொத்தமாக, சிமென்ட் துறை மந்த நிலையில் இருந்தது.
மந்த நிலை சிமென்ட் தேவை, 2 சதவீதம் என்ற அளவிற்கே உயர்ந்தது. சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் முழு உற்பத்தி திறனை பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. இத்துடன், சுண்ணாம்பு சுரங்க குத்தகை புதுப்பிப்பு, நிலக்கரி ஒதுக்கீடு ஆகியவை தொடர்பான அரசு கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்களும், சிமென்ட் துறையை மந்த நிலைக்கு ஆளாக்கின. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 – 8 சதவீதம் வளர்ச்சி காணும் என்ற மதிப்பீடு, சிமென்ட் துறைக்கு புத்துயிர் அளிக்கும். அடுத்த, 3 – 5 ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப, சிமென்ட் தேவை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, ஏ.சி.சி., புதிய தொழிற்பிரிவுகள் அமைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், ஜமுல் நகரில், நிறுவனத்தின் புதிய, ‘கிளிங்கர்’ ஆலை, அடுத்த சில தினங்களில் செயல்படத் துவங்கும். இந்நகரிலும், ஜார்க்கண்ட் மாநிலம், சிந்திரியிலும் அமைக்கப்பட்டு வரும், சிமென்ட் அரவை ஆலைகளும் விரைவில், செயல்படத் துவங்கும்.
பங்களிப்புசிமென்ட் துறை மந்த நிலையில் உள்ள போதிலும், கடந்த ஆண்டு, ஏ.சி.சி., 77 சதவீத உற்பத்தி திறனில் செயல்பட்டுள்ளது. இது, சிமென்ட் துறையின் சராசரியை விட, 4 சதவீதம் அதிகமாகும்.கடந்த, 2015ல், பிரான்சின், லபார்ஜி, சுவிட்சர்லாந்தின் ஹோல்சிம் ஆகியவை இணைந்து, லபார்ஜிஹோல்சிம் என்ற, உலகின், ‘நம்பர் 1’ சிமென்ட் நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்நிறுவனம், 90 நாடுகளில், 1,500 சிமென்ட் கலவை ஆலைகளையும், 200 சிமென்ட் தொழிற்சாலைகளையும் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மிகப் பெரிய துணை நிறுவனமாக, ஏ.சி.சி., விளங்குகிறது. இதன் மூலம், ஏ.சி.சி., சர்வதேச சிமென்ட் துறைக்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தனி நபர் பயன்பாடுஇந்தியாவில், தனி நபர் சிமென்ட் பயன்பாடு, 207 கிலோ என்ற அளவில் உள்ளது; இது, சர்வதேச சராசரியான, 540 கிலோவை விட, மிகவும் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|