பதிவு செய்த நாள்
27 ஏப்2016
00:13
புதுடில்லி : ‘பொது துறை வங்கிகளின் சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, தொடர்ந்து நீடித்தால், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு குறையும்’ என, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் அறிக்கை: இந்தியாவில், பொது துறை வங்கிகளின் வாரா கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 2015ல், ஒட்டுமொத்த வங்கிகளின் சொத்து மதிப்பில், வாரா கடன், 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன், 49.9 சதவீதமாக உள்ளது.இவ்வகை கடன் அதிகரிப்பதில், ஆபத்தும் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்தம்அடைந்தால், கடனாளிகள், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படும்; இது, பொது துறை வங்கிகளின் நிதியாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றின் சொத்து மதிப்பு குறைய வழி வகுக்கும்.
அத்தகைய சூழலில், மத்திய அரசு, பங்கு மூலதனம் மூலம் வங்கிகளுக்கு கைகொடுத்து உதவும் என்றாலும், அது, நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட் இலக்கை விட, அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாகவும், மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கலாம். தற்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், கடனும் மிதமான அளவில் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் வாரா கடன் சுமைதான், பொது துறை வங்கிகளை நிமிர விடாமல் அழுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வலுவாக இருந்தால், வங்கிகளின் கடன் சுமை வெகுவாக குறையும்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால், வரும் ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் வலுப்பெற்று, நிதி நிலை சீராகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்க வில்லையென்றால், இந்தியாவின் கடன் பெருகும். இந்தியா, தன் சுயதேவைகளுக்கு நிதி திரட்டுவது கூட சிரமமாக இருக்கும். அப்போது, அதன் கடன் தகுதி மதிப்பீடும் குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
பொது துறை வங்கிகளின் வாராக் கடன்: கடந்த, 2015, டிசம்பர் வரை, ரூ.3.70 லட்சம் கோடி. வாராக் கடனுக்காக, நிதி ஒதுக்குவதால், வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, பொது துறை வங்கிகளுக்கு, பங்கு மூலதனமாக, 2015 – 19ம் நிதியாண்டுகள் வரை, ரூ.70,000 கோடி வழங்க துவங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|