பதிவு செய்த நாள்
03 மே2016
06:48
பாரிஸ் : நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், போலிப் பொருட்கள் ஏற்றுமதியில் மட்டும், உலகளவில், இந்தியா ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளதாக, பிரான்சைச் சேர்ந்த, ஓ.இ.சி.டி., அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விவரம்:கடந்த, 2011 – 13 வரையிலான, மூன்று ஆண்டுகளில், சர்வதேச சுங்கத் துறையினர், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவற்றில், கைப்பை, வாசனை திரவியங்கள், இயந்திர உதிரிபாகங்கள், ரசாயனங்கள் உட்பட, பல பொருட்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, காலணிகள் தான், புகழ் பெற்ற, ‘பிராண்டு’களின் பெயரில் போலியாக தயாரித்து, அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உணவுப்பொருட்களில், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் போன்றவை கூட, பிரபல நிறுவனங்களை போல், போலி பெயர்களில், ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வலைதளம் வாயிலான விற்பனையில், போலி பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. மதிப்பீட்டு காலத்தில், சர்வதேச சுங்கத் துறையினர் பறிமுதல் செய்த போலி பொருட்களில், 62 சதவீதம், அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. போலி பொருட்கள் ஏற்றுமதியில், சீனா முதலிடத்தில் உள்ளது. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், பறிமுதல் செய்யப்பட்ட போலி பொருட்களில், சீனாவின் பங்கு, 63.2 சதவீதமாக உள்ளது. அடுத்த இடங்களில், துருக்கி, 3.3 சதவீதம்; சிங்கப்பூர், 1.9; தாய்லாந்து 1.6; இந்தியா 1.2 சதவீதம் ஆகியவை உள்ளன.
போலி பொருட்களின் இறக்குமதியால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகியவை உள்ளன. ஐரோப்பாவில் இறக்குமதியாகும் பொருட்களில், ஐந்து சதவீதம் போலியானவை. வளரும் நாடுகள், மிகப் பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இருந்தபோதிலும், அவை, போலிகளை ஒழிப்பதற்கு போதுமான நிர்வாகத் திறன் இன்றி உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட தடையற்ற வர்த்தக மண்டல நாடுகள் மற்றும், ஹாங்காங், சிங்கப்பூர் வழியாக போலி பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அமைப்பு சார்ந்த பயங்கரவாதிகள் உள்ள ஆப்கன், சிரியா போன்ற நாடுகள் வழியாகவும், போலி பொருட்கள் கடத்தப்படுகின்றன. இவற்றின் வாயிலான வருவாய், பயங்கரவாத குழுக்களுக்கும் செல்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போலியான வாகன உதிரிபாகங்கள், மருந்துகள், நச்சு ரசாயனம் கலந்த பொம்மைகள், குழந்தை உணவுப் பொருட்கள், தவறான கணக்கீட்டைக் காட்டும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை,மனித உயிருக்கே அச்சுறுத்தலாக உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|