பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
13:43
புதுடில்லி : ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்து உள்ளதால், தமிழகத்தில் காய்கறிகள் விலை சரியத் துவங்கி உள்ளது.தமிழகத்தில், பல மாவட்டங்களில் காய்கறி உற்பத்தி நடந்தாலும், கோடை வெயில் காரணமாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், காய்கறி விளைச்சல் வெகுவாக சரிந்தது. வெளிமாநில வரத்தும் குறைந்ததால், காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கிடுகிடுவென உயர்ந்தது.தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ, 100 ரூபாயை தொட்டது. கத்தரிக்காய், சேனைக்கிழங்கு, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ, 60 ரூபாய் வரை விற்கப்பட்டன.ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், தற்போது காய்கறி விளைச்சல் துவங்கி, ஒரு வாரமாக, அதிக அளவில் வரத்து உள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில், காய்கறிகளின் விலை வெகுவாக குறைய துவங்கி உள்ளது.தக்காளி, கத்தரி, உருளை, சேனைக்கிழங்கு, பச்சைமிளகாய், வெண்டைக்காய், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, அவரைக்காய் என, பல காய்கறிகளின் விலை, கிலோ, 25 முதல், 30ரூபாய் வரை விற்பனையாகிறது. வரும் நாட்களில், வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு, விலை மேலும் சரியும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.வாழைக்காய் ரூ.10 திடீர் உயர்வு ஏன்?பல காய்கறிகளின் விலை குறைந்து வந்தாலும், வாழைக்காய் விலை திடீரென உயரத் துவங்கி உள்ளது. கடந்த வாரம், 6, 7 ரூபாய்க்கு விற்ற வாழைக்காய், நேற்று, 10 ரூபாயாக உயர்ந்தது. 'ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும், தினமும், 20 லாரிகளில் வரும் வாழைக்காய், தற்போது, 10 லாரிகளாக குறைந்து விட்டது. இதுவே விலை உயர்வுக்கு காரணம்' என, கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|