பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
01:28
மும்பை : ‘ஜபாங்’ வலைதள நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதாக, ‘மைந்த்ரா’ வலைதள நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், நவநாகரிக ஆடைகள், காலணிகள், ‘பேஷன்’ பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும், மிகப்பெரிய வலைதள நிறுவனமாக, மைந்த்ரா உருவெடுத்துள்ளது.
பிரமிக்கத்தக்க வளர்ச்சி:இந்த ஒப்பந்தத்தில், 470 கோடி ரூபாய் (7 கோடி டாலர்) கைமாறியுள்ளது. கான்பூர் ஐ.ஐ.டி., மாணவரான முகேஷ் பன்சால், தன் நண்பர்கள், அசுதோஷ் லவானியா, வினீத் சக்சேனா ஆகியோருடன் இணைந்து, 2007ல், மைந்த்ரா வலைதளத்தை, 30 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவக்கினார். அன்பளிப்பு பொருட்களின் மொத்த விற்பனையில் ஈடுபட்ட மைந்த்ரா, 2010ல், ஆடைகள், கைக்கடிகாரங்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் சில்லரை விற்பனையில் இறங்கி, குறுகிய காலத்தில், பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கண்டது. இதையடுத்து, 2014ல், மைந்த்ரா வலைதளத்தை, ‘பிளிப்கார்ட்’ நிறுவனம், 2,000 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இன்று, பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக, மைந்த்ரா செயல்பட்டு வருகிறது.
கடந்த, 2012ல், பிரவீன் சின்ஹா, லஷ்மி பொட்லுாரி, சந்திரமோகன் ஆகியோர், குளோபல் பேஷன் குழுமத்தின் கீழ், ‘ஜபாங்’ வலைதள நிறுவனத்தை உருவாக்கினர்.இந்நிறுவனம், ஆடைகள், அழகு சாதனங்கள், காலணிகள், நகைகள், உட்பட, 1,500க்கும் அதிகமான சர்வதேச ‘பிராண்டு’களின், 90 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்களை, விற்பனை செய்து வருகிறது.
தன்னிகரற்ற நிறுவனமாக...மூன்று ஆண்டுகளில், 100 கோடி டாலர் வர்த்தக நிறுவனமாக, ஜபாங் உருவெடுத்துள்ளது. இதை, கையகப்படுத்தியதன் மூலம், இந்தியாவில், வலைதளம் வாயிலாக, நவநாகரிக ஆடைகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையில், தன்னிகரற்ற நிறுவனமாக, மைந்த்ரா உருவெடுத்து உள்ளது. இது, தாய் நிறுவனமான பிளிப்கார்டை மேலும் வலுப்படுத்தி, அமேசான் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்கவும் துணை புரிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|