பதிவு செய்த நாள்
08 செப்2016
23:17
புதுடில்லி : ‘உலகளவில், சிறப்பாக செயல்பட்டு வரும் எரிசக்தி துறை நிறுவனங்களில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 8வது இடத்தை பிடித்துள்ளது’ என, அமெரிக்காவைச் சேர்ந்த, எஸ் அண்ட் பி குளோபல் பிளாட்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம் ஆண்டுதோறும், உலகளவில் எரிசக்தி துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும், 250 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு, நிதி நிலை, லாபம், முதலீட்டின் மீதான வருவாய் ஆகிய அம்சங்கள் அடிப்படையில், இத்தேர்வு நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், முதன்முதலாக, ‘டாப் – 10’ பட்டியலில் நுழைந்து, 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு, 14வது இடத்தில் இருந்தது.
இதே போல, ரிபைனர்ஸ் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 48வது இடத்தில் இருந்து, 14வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு, 133வது இடத்தில் இருந்த இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தாண்டு, 66வது இடத்தை பிடித்துள்ளது. பொது துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், பின்னடைவை கண்டு, 20 இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு, 17வது இடத்தில் இருந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய விலைச் சரிவின் தாக்கத்தை சந்தித்துள்ளது. இதற்கு, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான, ‘ஒபெக்’ சர்வதேச எண்ணெய் சந்தையை, தன் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பியதும் ஒரு காரணம்.
இத்தகைய சூழல், எரிசக்தி துறை நிறுவனங்கள் சிறப்பாக வளர்ச்சி காணவும், அவற்றின் நிதிவளம் அதிகரிக்கவும் துணை புரிந்துள்ளது. இந்தியா, நிலக்கரியை அதிகமாக பயன்படுத்துவதால், பொது துறையைச் சேர்ந்த, கோல் இந்தியா நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் நன்கு உள்ளன. அதனால், சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள் பட்டியலில், கோல் இந்தியா, 38வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த, அதானி பவர் நிறுவனம், 250வது இடத்தை பிடித்துள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|