பதிவு செய்த நாள்
30 செப்2016
00:53
புதுடில்லி;‘ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்ரிக்காவை உள்ளடக்கிய, இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்தியத்தில், இந்தியா, மிக அதிகளவில் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 180 கோடி டாலர் திரட்டியுள்ளது’ என, ‘யர்னஸ்ட் அண்ட் யங்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம் :முதலீட்டாளர்களிடையே, இந்திய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவையும், இந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்துள்ளன. இதன் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் மேற்கொள்ளும் புதிய பங்கு வெளியீடுகளில், முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர்.
500 கோடி டாலர்இதனால், இந்தாண்டு துவங்கி இதுவரை, பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச்சந்தை; என்.எஸ்.இ., என அழைக்கப்படும், தேசிய பங்குச்சந்தை ஆகியவற்றில், 56 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 180 கோடி டாலர் திரட்டியுள்ளன. இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்தியத்தில், இந்திய பங்குச்சந்தைகள் தான், மிக அதிகளவில், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு உள்ளன. ஜூலை – செப்., 29 வரையிலான காலத்தில், மும்பை பங்குச்சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவில், 15 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதே காலத்தில், லண்டன் பங்குச்சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவில், ஏழு புதிய பங்கு வெளியீடுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பல நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், சராசரியாக, 10 கோடி டாலருக்கு மேல் திரட்டியுள்ளன. அதனடிப்படையில், இந்தாண்டு இறுதிக்குள், பங்கு வெளியீடுகளில், 500 கோடி டாலருக்கு மேல் திரட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமையான பொருளாதாரம்
உலக நாடுகளில், புதிய பங்கு வெளியீடுகள் தேக்கம் கண்டுள்ள நிலையில், இந்தியா வளர்ச்சி கண்டு வருவது பாராட்டத்தக்கது. இந்தாண்டு, இதுவரை, சர்வதேச அளவில் புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 7,940 கோடி டாலர் திரட்டப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில்திரட்டப்பட்டதை விட, 39 சதவீதம் குறைவாகும். அது போல, புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையும், 23 சதவீதம் சரிவடைந்து, 704 ஆக குறைந்துள்ளது. இந்தியாவின் வலிமையான பொருளாதாரம், நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு ஆகியவை காரணமாக, கடந்த ஆண்டை விட, 2017ல், அதிகளவில் புதிய பங்கு வெளியீடுகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|