பதிவு செய்த நாள்
02 அக்2016
00:29
லக்னோ:‘நடப்பு பண்டிகை காலத்தில், நுகர்வோர்கள், வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை வாங்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடுவர்’ என, ‘அசோசெம்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பு, சென்னை, மும்பை, டில்லி, பெங்களூரு உட்பட, 10 நகரங்களில், 2,500க்கும் அதிகமானோரிடம், பொருட்கள் வாங்குவது தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டது. அதில், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும், 25 – 40 வயதுள்ளோர் பங்கேற்றனர்; அவர்கள், ‘பித்ர பக் ஷ’ காலம் என்பதால், புதிய பொருட்கள் வாங்குவதை, நவராத்திரியை தொடர்ந்து வரும் பண்டிகை காலத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
அதிகரிக்கும்‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்ளிட்ட, வலைதள சந்தை நிறுவனங்கள், பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிரடி விற்பனையை துவக்கியுள்ளன. கடந்த ஆண்டு, வலைதள நிறுவனங்களில், ‘டிவி, ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின்’ உள்ளிட்ட, பல்வேறு பொருட்களுக்காக, நுகர்வோர்கள், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு உள்ளனர்.
‘இந்தாண்டு, நவராத்திரி துவங்கி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என, டிசம்பர் இறுதி வரையிலான பண்டிகை காலத்தில், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக, நுகர்வோர்கள் செலவிடுவர்; வலைதள நிறுவனங்களின் விற்பனை, 25 சதவீதம் அதிகரிக்கும்’ என, அசோசெம் மதிப்பிட்டு உள்ளது.
ஆய்வில், 60 சதவீதத்திற்கும் அதிகமானோர், கணினி, மொபைல் போன் வாயிலாக, வலைதளத்தில் பொருட்கள் வாங்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர். எஞ்சியோரில், பெரும்பாலானோர், வழக்கப்படி, கடைகளுக்குச் சென்று பொருட்களை தேர்வு செய்ய உள்ளதாக கூறியுள்ளனர். கடைகளை விட, வலைதள சந்தையில், ஆடைகள் முதல், அழகு சாதனங்கள் வரை, நகைகள் முதல், மொபைல் போன்கள் வரை, ‘டிவி’ முதல், லேப் – டாப் வரை, தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அவற்றை வீட்டில் இருந்தபடியே, ‘ஆர்டர்’ கொடுத்து, சுலபமாக பெறலாம் என்பதால், வலைதளங்களில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது.
நம்பிக்கை:கடந்த ஆண்டு, பண்டிகை காலத்தின் போது, வலைதளங்களில் அதிகளவில், ‘ஆர்டர்’ குவிந்ததால், பல நிறுவனங்களின், ‘சர்வர்’ பாதிக்கப்பட்டது. மேலும், பொருட்கள் மளமளவென விற்றுத் தீர்ந்ததால், ஆர்டர் கொடுத்த பலருக்கு, பொருட்களை சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்தாண்டு, இது போன்ற பிரச்னைகள் எழா வண்ணம், அனைத்து முன்னேற்பாடுகளையும், நிறுவனங்கள் செய்ய வேண்டும்; சரக்குகளை, போதுமான அளவிற்கு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்; கையிருப்பில் இல்லாதவை குறித்த தகவலை, உடனுக்குடன் வெளியிட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலம், நிறுவனங்கள், நுகர்வோர்களின் நம்பிக்கையை பெற முடியும் என, அசோசெம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|