பதிவு செய்த நாள்
29 ஜன2017
00:53
மும்பை:‘ஏற்கனவே மதிப்பிட்டதை விட, நாட்டின் பணப்புழக்கம் வேகமாக சீரடைந்து வருவதால், மார்ச் இறுதிக்குள், இயல்பு நிலை திரும்பும்’ என, ஜப்பானைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, ‘நோமுரா’ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஆண்டு, நவ., 4 நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், நாட்டின் பணப்புழக்க விகிதம், 11.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், நவ., 8ல், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்தது.இதனால், புழக்கத்தில் இருந்த, 84 சதவீத உயர் மதிப்புள்ள செல்லாத நோட்டுகளை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டது. உடனடியாக, அந்த அளவிற்கான புதிய கரன்சிகளை, புழக்கத்தில் விட இயலாத காரணத்தால், நாட்டின் பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது.
இதனால், நடப்பு ஜன., 20 நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், பணப்புழக்க விகிதம், 11.8 சதவீதத்தில் இருந்து, 6.5 சதவீதமாக சரிவடைந்தது.தற்போது, செல்லாத ரூபாய் நோட்டுகளின் டிபாசிட் முடிவிற்கு வந்துள்ளது. அத்துடன், ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை, இடைவிடாது அச்சடித்து, புழக்கத்தில் விட்டு வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதே நிலை தொடருமானால், மார்ச்சில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், பணப்புழக்க விகிதம், 9 சதவீதத்தை எட்டும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இது, பொருளாதார நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்த போதுமானதானதாக இருக்கும்.அத்துடன், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து, இந்தியா, மிக விரைவாக மீளும்.
பணப்புழக்கம் பெருகினால், மக்களின் தேவை அதிகரித்து, பல்வேறு பொருட்களின் விற்பனை உயரும். இது, பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு துணை புரியும்.இத்தகைய சூழலில், புதிய தொழில்கள், முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.தற்போது, வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்துள்ளது. எனினும், பொருளாதார மந்தநிலையால், வங்கிகளின் கடன் வளர்ச்சி சுணக்கமாக உள்ளது.
பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும் போது, வங்கிகளின் தொழில் துறை சார்ந்த கடன் வளர்ச்சி அதிகரிக்கும். அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறையவும் வாய்ப்புள்ளது.இந்தாண்டு, ஜூலைக்கு பின், இந்திய பொருளாதாரம் வெற்றிப் பாதையில் நடைபோடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|