பதிவு செய்த நாள்
18 பிப்2017
04:48
நியூயார்க் : ‘‘கடந்த, 2016 அக்., – டிச., வரையிலான, நான்காவது காலாண்டில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பெப்ஸி இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,’’ என, பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயி தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் பேசியதாவது: நாட்டில், 80 சதவீத உயர் மதிப்பு கரன்சிகளை திரும்பப் பெற்று, புதிய கரன்சிகளை புழக்கத்தில் விடுவது என்பது, சாதாரண பணி அல்ல. இந்த திட்டத்தால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களின் தேவை குறைந்தது. அதன் காரணமாக, பெப்ஸி குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டது. இதன் தாக்கத்தால், நிறுவனத்தின் இந்திய பிரிவின் வருவாய், நான்காவது காலாண்டில் குறைந்தது. தற்போது, நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. எனினும், பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் முற்றிலுமாக நீங்கவில்லை.
இயல்பு நிலை மெல்ல திரும்பி வருவதால், மக்களின் நுகர்வு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தாண்டு ஜூன் மாதத்திற்குள், இயல்பு நிலை திரும்பி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, நிறுவனத்தின் விற்பனை, வழக்கம் போல சூடுபிடிக்கும். கடந்த நான்காவது காலாண்டில், பெப்ஸிகோ நிறுவனத்தின் நிகர வருவாய், 5 சதவீதம் உயர்ந்து, 1,951 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, 2015ம் ஆண்டு, இதே காலாண்டில், 1,858 கோடி டாலராக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|