பதிவு செய்த நாள்
28 பிப்2017
02:02
புதுடில்லி, பிப். 28–‘இந்தியாவில், நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது; ஒரு நிறுவனம், பிற நிறுவனத்தை கையகப்படுத்துவது ஆகியவற்றுக்கு, தற்போது, வலுவான சட்டங்களும், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளும் உள்ளன. அதனால், நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும்’ என, பிரைஸ் வாட்டர்கூப்பர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம், எத்தகைய இடர்களையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலுடன் விளங்குகிறது. இதன் காரணமாக, கடன் சுமையால் சொத்துகளை இழக்கும் நிறுவனங்கள் பெருகி வரும் நிலையிலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், நிறுவனங்கள் இடையிலான இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது. ‘அமேசான், ஊபர்’ போன்ற பன்னாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்கள், இந்தியாவில் வலுவாக காலுான்றி வருகின்றன. அதனால், இந்திய மின்னணு வணிக துறையில், இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளது; பல நிறுவனங்கள், சந்தையில் நீடிக்க, இத்தகைய செயல்பாடு மிகவும் அவசியமாக உள்ளது. அன்னிய முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தியது; வரி மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் தொடர்பான சீர்திருத்தங்கள்; சர்வதேச தரத்திற்கு நிகரான, கணக்கு தணிக்கை முறையை அமல்படுத்தியது; மொரீஷியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன், வரி விதிப்பு ஒப்பந்தங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள் போன்றவை, இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன. விரைவில் அமலுக்கு வரவுள்ள, ஜி.ஏ.ஏ.ஆர்., – ஜி.எஸ்.டி., போன்ற சட்டங்களும், நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவதற்கும், கையகப்படுத்துவதற்கும் துணை புரியும். பல்வேறு துறைகளில், இணைப்பு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாது என்பதற்கு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை உதாரணமாக கூறலாம். தொலை தொடர்பு துறையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், எம்.டி.எஸ்., இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தி, அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தி உள்ளது. மின் துறையில், டாடா பவர் நிறுவனம், வெல்ஸ்பன் எனர்ஜி நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. கோட்டக் மகிந்திரா வங்கி, ஐ.என்.ஜி., வைஸ்யா வங்கியை, தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இது போல, மேலும் பல இணைப்பு நடவடிக்கைகள் அதிகளவில் நடைபெற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தொலை தொடர்பு துறைதொலை தொடர்பு துறையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் – எம்.டி.எஸ்., இந்தியா, பார்தி ஏர்டெல் – டெலினார், வோடபோன் – ஐடியா செல்லுலார் இணைப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதர துறைகளிலும், நிறுவனங்களின் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|