பதிவு செய்த நாள்
06 ஏப்2017
05:12
ஐதராபாத் : ‘‘அமெரிக்க அரசின், ‘எச்1 பி’ விசா கட்டுப்பாடுகள், இந்திய, ஐ.டி., துறை வளர்ச்சிக்கு சவால் விடுப்பதாக உள்ளன,’’ என, ‘இன்போசிஸ்’ நிறுவனருள் ஒருவரான, கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: இந்திய, ஐ.டி., துறை நிலையான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது; இது, நடப்பு நிதியாண்டிலும் தொடரும். எனினும், அமெரிக்கா, ‘எச்1 பி’ விசாவுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மட்டுமே, இந்திய, ஐ.டி., துறை சந்திக்க உள்ள முக்கிய சவாலாக இருக்கும். மற்றபடி, ஐ.டி., நிறுவனங்களின் வர்த்தகம், வழக்கம் போலவே நடைபெறும்.சர்வதேச அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 23 சதவீதம் உயர்ந்தால், ஐ.டி., துறை முதலீடு, 3 – 5 சதவீதம் உயரும். அதை விட, இந்திய, ஐ.டி., துறை, 4 – 5 சதவீதம் வளர்ச்சி காணும். அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், இந்திய, ஐ.டி., துறை, 9 – 10 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஆகவே, ஐ.டி., துறைக்கு, இந்த நிதியாண்டில் மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக நான் கருதவில்லை. 2008ல், அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது, இந்திய, ஐ.டி., துறையின் வளர்ச்சி பூஜ்ஜியமாக குறைந்தது. நடப்பு நிதியாண்டில், அத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பில்லை. அதே சமயம், ஐ.டி., துறையின் வளர்ச்சி மிதமான அளவில் உள்ளதால், பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது குறைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு, சாப்ட்வேர் சோதனை போன்ற சில சேவைகளில், ‘ஆட்டோமேஷன்’ எனப்படும், பணியாளர் உதவியின்றி, தன்னிச்சையாக நடைபெறும் பணி நடைமுறைகள் அதிகரித்து வருகின்றன. இதுவும், பணியாளர் தேர்வு குறைய வழிவகுத்து உள்ளது.ஐ.டி., துறையில், துவக்க நிலை பணிகளுக்கு பொறியாளர்களை தேர்வு செய்வது குறைந்துள்ளது. அவர்களுக்கான ஊதியமும், கடந்த சில ஆண்டுகளாக அதிக மாற்றமின்றி உள்ளது.
அதிகரித்து வரும் பொறியாளர்களுக்கு ஏற்ப, ஐ.டி., நிறுவனங்களுக்கு பணியாளர்கள் தேவைப்படாமல் உள்ளதால், அத்தகையோருக்கான ஊதியம் உயர்த்தப்படாமல் உள்ளது. ஐ.டி., பொறியாளர்கள், இதர துறைகளில் நுழைய வேண்டும். தனித்துவமான, சிறப்பு ஆற்றல் தேவைப்படும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றில் உள்ள வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதிக்க வாய்ப்புஅமெரிக்க நிறுவனங்கள், தொழில்நுட்ப பணிகளுக்காக, வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்த, ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, உள்நாட்டு வேலைவாய்ப்பை பெருக்க, இந்த விசாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அமெரிக்காவை பெரிதும் சார்ந்துள்ள, இந்திய, ஐ.டி., மற்றும் ஐ.டி., சேவைகள் துறைக்கு, சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என, இந்திய சாப்ட்வேர் சேவைகள் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|