பதிவு செய்த நாள்
19 ஏப்2017
01:57
புதுடில்லி : வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ஏ.டி.எம்.,களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், வங்கிகள் சார்பாக, அவற்றின், ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்பும் சேவையில், 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இத்தகைய, ரொக்கச் சேவை நிறுவனங்கள், ஏ.டி.எம்., மையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஆகியவை, தனியார் பாதுகாப்பு முகமை அமைப்பு கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வருவதாகக் கூறி, அவற்றில், 49 சதவீத அளவிற்கே, அன்னிய நேரடி முதலீட்டிற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்த சட்டம் தங்களுக்கு பொருந்தாது என, ரொக்கச் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கூறி வருகின்றன.
தனியார் நிறுவனங்களின் பாதுகாப்புக்காக, பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்கள், பாதுகாப்பு வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றைத் தான், இந்த சட்டம் கட்டுப்படுத்தும் என, அவை தெரிவிக்கின்றன. இத்தகைய குழப்பமான சூழல் காரணமாக, ரொக்கச் சேவை துறையில், அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இப்பிரச்னை குறித்து, கடந்த மாதம், பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரொக்கச் சேவை மற்றும் ஏ.டி.எம்.,களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு, தனியார் பாதுகாப்பு முகமை அமைப்புகள் கட்டுப்பாட்டு சட்டம் பொருந்தாது என, தெளிவான அறிக்கை வெளியிடுமாறு, உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்வது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உள்துறை அமைச்சகம், விரைவில் அறிக்கை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், ரொக்கச் சேவை, ஏ.டி.எம்., நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்வதற்கான தடை நீங்கும். அத்துடன், கரன்சிகளை ஆய்வு செய்வது, அடுக்குவது, எண்ணுவது உள்ளிட்ட பணிகளுக்கான சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களிலும், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
40 ஆயிரம் கோடி ரூபாய்ரைட்டர் சேப்கார்டு, எஸ்.ஐ.எஸ்., செக்யூரிடாஸ், சி.எம்.எஸ்., செக்யூர் வேல்யூ, லாஜிகேஷ், பிரிங்ஸ் ஆர்யா, செக்யூரிட்டன்ஸ் அண்டு சயின்டிபிக் செக்யூரிட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் சேவையை மேற்கொண்டு வருகின்றன. இவை, தினமும், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, ஏ.டி.எம்.,களில் பணத்தை நிரப்புகின்றன. கரன்சியை ஆய்வு செய்வது, ரூபாய் நோட்டுகளை எண்ணுவது உள்ளிட்ட பணிகளுக்கான சாதனங்களை, டி.வி.எஸ்., எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி.ஐ., போன்ற நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|