பதிவு செய்த நாள்
27 ஏப்2017
00:45
புதுடில்லி : ‘‘பல்வேறு காரணங்களால், தொழில் நொடிந்து, நிறுவனங்கள் திவாலாவதை களங்கமாக கருதக் கூடாது,’’ என, நிதி அமைச்சகத்தின், முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்து உள்ளார்.
அவர், பிக்கி – பி.டபிள்யு.சி., இணைந்து தயாரித்த, இந்திய தயாரிப்புத் துறை ஆய்வறிக்கையை வெளியிட்டு, மேலும் பேசியதாவது: தொழில்முனைவு சார்ந்த கண்டுபிடிப்புகள் குறித்து, சமூகத்தில் பரவலான புரிதல் தேவைப்படுகிறது. தொழில் செய்வதில், வெற்றியும், தோல்வியும் அடங்கியுள்ளது. தவறான காரணம் எதுவுமின்றி, ஒரு தொழில் நொடிவதும், நிறுவனம் திவாலாவதும் சகஜம். அதை, நிறுவனத்திற்கு ஏற்பட்ட களங்கமாக பார்க்கக் கூடாது.
புதுமையான தொழில்கள்:தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகளில், அதிக அளவிலான புதுமையான முன்னோடி திட்டங்களை நாம் மேற்கொள்கிறோம். அத்தகைய சூழலில், எந்த அளவிற்கு புதுமையான தொழில்களில் ஈடுபடுகிறோமோ, அந்த அளவிற்கு, அவற்றில் தோல்வியையும் சந்திக்க நேரலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும். நம் நாட்டிற்கு, புதுமையான கண்டுபிடிப்பு என்ற கலாசாரம் தேவைப்படுகிறது. அதே சமயம், அந்த கலாசாரம், ஒரு சில தோல்விகளின் அடிப்படையில் தான் வளரும் என்பதையும், நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளும் இத்தகைய கலாசாரம், தொழிலில் ஏற்படும் தோல்வி, திவால் போன்ற பாதகமான அம்சங்களையும் சகித்துக் கொள்ள வேண்டும். எத்தகைய நிலவரத்தையும் சமாளித்து, செயல்படக் கூடிய ஆற்றல், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உள்ளது. சரியான வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், அந்நிறுவனங்களால், மிக விரைவாக, புதுமையான கண்டு பிடிப்புகளை மேற்கொள்ள முடியும்.இந்திய தயாரிப்புத் துறையில், பழைய வகை பணிகள் வழக்கொழிந்து, புதிய நடைமுறைகள் அறிமுகமாகி வருகின்றன. இத்தகைய சூழலில், நாடு, தொழில்மயமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தடைக்கற்கள்:அதே சமயம், இந்திய பொருளாதாரத்தில், அனைத்து துறைகளின் பங்களிப்பு, ஒரே சீராக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, விவசாயம், தயாரிப்புத் துறைகளை விஞ்சி, சேவைகள் துறை, வளர்ச்சியில் முன்னிலை வகிப்பதை குறிப்பிடலாம். குறிப்பிட்ட பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைக்காத சூழலும், பணியாளர்கள், திறன் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதும், இந்தியா, தொழில் மயமாவதற்கு தடைக்கற்களாக உள்ளன. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
வங்கதேசத்தை விட, இந்தியாவில் வரி மற்றும் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளன. அவற்றை குறைத்தால், இந்திய தொழில் துறை, அண்டை நாடுகளின் போட்டியை சமாளித்து, சர்வதேச சந்தையில் பங்களிப்பை அதிகரிக்க முடியும். இந்தியா, மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எனினும், அதன் உண்மையான ஆற்றலுடன் ஒப்பிடும் போது, இந்த வளர்ச்சி குறைவு தான்.
-சுர்ஜித் பல்லா, தலைவர், ஓக்சஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|