பதிவு செய்த நாள்
17 மே2017
01:07
மும்பை : சைவ உணவை பெரிதும் விரும்பும் பெரும்பான்மையான இந்தியர்கள், அவ்வகை உணவு வகைகள் சுலபமாக கிடைக்கக் கூடிய, துபாய், பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்லவே அதிகம் விரும்புவதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
சுற்றுலா துறையைச் சேர்ந்த, காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறுவனம், இந்தியர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.அதன் விபரம்: இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையில், 20 – 65 வயதுடைய, 5,000 பேரிடம், வெளிநாட்டு சுற்றுலா தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 20 – 45 வயதினரில், 85 சதவீதத்திற்கும் அதிகமானோர், சைவ உணவு கிடைக்கும், பல்வேறு கலாசார மக்கள் வாழும் நாடுகளுக்கு பயணம் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம், 46 – 65 வயதினரில், பெரும்பான்மையானோர், சைவ உணவு உறுதியாக கிடைக்கும் நாடுகளுக்கு குழுவாக பயணம் செய்ய ஆர்வம் உள்ளதாக கூறியுள்ளனர்.
சைவ உணவு பிரியர்களுக்கு விருப்பமான நாடுகளாக, துபாய், பிரிட்டன், சிங்கப்பூர் ஆகியவை உள்ளன. இங்கு, ஏராளமான இந்தியர்களும், இந்திய உணவகங்களும் உள்ளதால், காய்கறி உணவுகளை தேடி அலைய வேண்டியதில்லை என்பது தான், அதற்கு காரணம்.இத்துடன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, மலேஷியா, இஸ்ரேல், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கும் செல்ல, சைவ உணவுக்காரர்கள் விரும்புகின்றனர். இந்நாடுகளில், சைவ உணவு விடுதிகள் ஓரளவு உள்ளன.
சைவ உணவு பயணியரில், 70 சதவீதம் பேர், தங்களுக்கு விருப்பமான உணவு கிடைக்கும் நாடுகளை சுற்றிப் பார்க்கவே ஆசைப்படுகின்றனர். எனினும், 30 சதவீதத்தினர், முதலில் பயணிக்க வேண்டிய நாடுகளை தேர்வு செய்துவிட்டு, பின், அங்கு சைவ உணவகங்கள் எங்கு உள்ளன என, தேடுகின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்லும், சைவ உணவு பயணியரில், 53 சதவீதம் பேர், சைவ உணவுகளை மட்டுமே பரிமாறும் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்டுகளை நாடுகின்றனர்; 20 சதவீதம் பேர், அசைவ ஓட்டலில், சைவ உணவு கிடைத்தால் கூட போதும் என, திருப்தி அடைகின்றனர்.
வெளிநாடுகளுக்கு குறுகிய கால பயணம் மேற்கொள்வோர், நுாடுல்ஸ், உப்புமா, புளியோதரை போன்ற உடனடி உணவுப் பொருட்களை கையோடு கொண்டு செல்கின்றனர். ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட பயணமாக இருந்தால், வெளிநாடுகளில், சைவ உணவகங்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பான்மையானோர், சைவ உணவுகளை உண்கின்றனர். அத்தகையோர், வெளிநாடுகளுக்குச் செல்கையில், அங்கு சைவ உணவு கிடைக்கிறதா என, உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். அதன் பின்னே, பயணத் திட்டத்தை முடிவு செய்கின்றனர். தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து, மிக அதிகமானோர், சைவ உணவகங்கள் உள்ள வெளிநாடுகளுக்குச் செல்வதை விரும்புகின்றனர்.
-கரன் ஆனந்த்,தலைவர், நல்லுறவு பிரிவு, காக்ஸ் அண்டு கிங்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|