பதிவு செய்த நாள்
24 மே2017
23:48
புதுடில்லி : தகவல் தொழிற்நுட்பத் துறையில், வேலை வாய்ப்புகள் குறையும் என, வெளியான தகவலை மறுத்துள்ள மத்திய அரசு, அடுத்த எட்டு ஆண்டுகளில், 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என, தெரிவித்து உள்ளது.
‘ஐ.டி., எனப்படும், தகவல் தொழிற்நுட்பத் துறையில், புதிய தொழிற்நுட்பங்களை புகுத்த தவறியதால், ஆண்டுக்கு, 2 லட்சம் வீதம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 6 லட்சம் பேர் வேலையிழப்பர்’ என, சமீபத்தில், ஹெட் ஹன்டர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
வளர்ச்சி:
இது குறித்து, மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க உரையில், மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஐ.டி., நிறுவனங்கள், நேரடியாக, 40 லட்சம் பேருக்கும், மறைமுகமாக, 1.30 கோடி பேருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன. அமைச்சகத்தின் நடவடிக்கையால், சிறிய நகரங்களிலும், பி.பி.ஓ., எனப்படும், வெளியாருக்கு பணிகளை செய்து முடிக்கும் நிறுவனங்கள் தோன்றி உள்ளன. இந்திய சாப்ட்வேர் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ 4 – 5 ஆண்டுகளில், 20 – 25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என, மதிப்பிட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஐ.டி., துறை வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என, டீம் லீஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், 2016 அக்., முதல், இந்தாண்டு மார்ச் வரையிலான ஆறு மாதங்களில், ஐ.டி., நிறுவனங்களின் பணியாளர் தேர்வு, முந்தைய ஆறு மாதங்களை விட, 4 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்னணு வணிகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் பணியாளர் தேர்வு, 2 சதவீதம் உயரும்; வேலை வாய்ப்பு, 14.94 சதவீதம் வளர்ச்சி காணும் என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முதலீடு:
கடந்த, 2014ல், மின்னணு சாதனங்கள் தயாரிப்பில், 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டு திட்டங்கள் இருந்தன. இது, தற்போது, 1.43 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியாவில், 72 மொபைல் போன் நிறுவனங்கள் மூலம், 1 லட்சம் பேர் நேரடியாகவும், 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மொபைல் போன் தயாரிப்பில், 2014 – 15ல் மேற்கொள்ளப்பட்ட, 18,992 கோடி ரூபாய் அளவிலான முதலீடு, 2016 – 17ல், 89,756 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆக, இந்தியாவில், ஐ.டி., மற்றும் ஐ.டி., சார்ந்த துறைகள் சிறப்பாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், வேலை வாய்ப்பு குறையும் என கூறப்படுவதை, நான் வன்மையாக மறுக்கிறேன். ஐ.டி., துறை அமைச்சர் என்ற முறையில், வேலை வாய்ப்பு குறையாது என்றும் உறுதியாக கூறுகிறேன். இன்னும் சொல்லப் போனால், மின்னணு பொருளாதாரம் பரவலாகும்பட்சத்தில், மிகச் சிறந்த எழுச்சியை, ஐ.டி., துறை காணும். வரும், 2025ல், 25 – 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
கிராமப்புறங்களில், அரசு மற்றும் இணையம் சார்ந்த பணிகளுக்காக, 2.5 லட்சம் பொது சேவை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவை, 1,800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன. அதில், ஆதார் சார்ந்த சேவைகள் வாயிலாக, 600 கோடி ரூபாய் ஈட்டப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|