பதிவு செய்த நாள்
23 ஜூன்2017
00:44
வாஷிங்டன் : ‘‘இந்திய, ஐ.டி., துறையின் முன்னேற்றம், அமெரிக்காவின், ‘எச் – 1பி’ விசாவை, பெரிதும் சார்ந்துள்ளதாக கூறுவது தவறு,’’ என, இன்போசிஸ் சி.இ.ஓ., விஷால் சிக்கா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, உள்நாட்டு வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில், அயல்நாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும், ‘எச் – 1பி’ விசா விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது. அத்துடன், விசா கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனால், அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ், டி.சி.எஸ்., உள்ளிட்ட, ஐ.டி., நிறுவனங்கள், அவற்றின் இந்திய பிரிவில் இருந்து, ‘எச் – 1பி’ விசா மூலம், பணியாளர்களை வரவழைப்பது குறையும். உள்நாட்டினரை, அதிக ஊதியத்தில் நியமிப்பதால், அவற்றின் நடைமுறை செலவினம் அதிகரிக்கும்.
இது ஒருபுறம் இருக்க, இந்திய, ஐ.டி., நிறுவனங்களின் வர்த்தக நடைமுறை, பெரிதும், ‘எச் – 1பி’ விசாவை சார்ந்திருக்கும் காரணத்தால், அவை பெரிதும் பாதிக்கப்படும். இந்நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறையும் என, கூறப்படுகிறது.
இதை, இன்போசிஸ் சி.இ.ஓ., விஷால் சிக்கா மறுத்துள்ளார். வாஷிங்டனில், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், ‘எச் – 1பி’ விசாவை பெரிதும் சார்ந்திருப்பதாக கூறுவது தவறு. அமெரிக்கா, ஆண்டுக்கு, 65 ஆயிரம், ‘எச் – 1பி’ விசாக்களை வழங்குகிறது. இதன்படி கணக்கிட்டால், 10 ஆண்டுகளில், 6.50 லட்சம் பேருக்கு மட்டுமே, இந்த விசா கிடைத்திருக்கும். ஆனால், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இதே காலத்தில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளன. இன்போசிஸ் மட்டுமே, 2 லட்சத்திற்கும் அதிகமானோரை பணிக்கு அமர்த்தி உள்ளது. இது போல, இரு மடங்கு வல்லுனர்களுடன், டி.சி.எஸ்., நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த இரு நிறுவனங்களில் மட்டுமே, இந்த அளவிற்கு வல்லுனர்கள் உள்ளனர். இதர, ஐ.டி., நிறுவனங்களின் பணியாளர்களை கணக்கிடும் பட்சத்தில், இந்தியா, ‘எச் – 1பி’ விசாவை நம்பி இல்லை என்பது, தெளிவாக புரியும். தற்போது, பெரும்பான்மையான பணிகளில், ‘ஆட்டோமேஷன்’ எனப்படும், தானியக்க நடைமுறை வந்து கொண்டிருக்கிறது. அத்துடன், செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த சாதனங்கள் இயக்கம், சைபர் பாதுகாப்பு போன்ற புதிய தொழிற்நுட்பங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஆகவே, இத்தகைய புதுமையான தொழிற்நுட்பங்களில், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இதனால், புதிய திறன்கள் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம், ஐ.டி., நிறுவனங்களுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உயர் தொழிற்நுட்பம்:
இன்போசிஸ், அடுத்த இரு ஆண்டுகளில், அமெரிக்காவில், புதிய தலைமுறைக்கான, 10 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இவை அனைத்தும், செயற்கை நுண்ணறிவு, தானியக்கம், மேகக் கணினி உள்ளிட்ட, உயர் தொழிற்நுட்பம் சார்ந்தவையாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|