பதிவு செய்த நாள்
05 ஆக2017
06:48
பொருட்களை உற்பத்தி செய்யும் நபர் கட்டாயம், ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்டும் என, கூறுகின்றனர். இதை பற்றி விளக்கவும்?– நாகநாதன், ஆம்பூர்உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அனைவரும், ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர்களின் ஆண்டு விற்பனை, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே பதிவு தேவை. ஒருவேளை, அவர் வெளி மாநில வழங்கலில் ஈடுபட்டால், அவசியம் பதிவு எண் தேவை.
சார், நான் ஓர் உற்பத்தியாளர். இணக்க வரி நிலையை தேர்ந்தெடுத்து உள்ளேன். நாங்கள் வரி செலுத்தும் போது, விற்பனை தொகையில் எத்தனை சதவீதம், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்?– அபுபக்கர், கரூர்நீங்கள், விற்பனை தொகையில் மொத்தம், 2 சதவீதம், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். அதை, சி.ஜி.எஸ்.டி., 1 சதவீதம், எஸ்.ஜி.எஸ்.டி., 1 சதவீதம் என, பிரித்து வரி செலுத்த வேண்டும். உங்களுக்கு, உள்ளீட்டு வரி பயன் கிடைக்காது.
ஐயா, நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுடைய மொத்த ஆண்டு வருமானம், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது. நாங்கள், கமிட்டியில் பொருட்களை விற்பனை செய்யும் போது அல்லது சர்க்கரை ஆலையில் கரும்பை வழங்கும் போது, ஜி.எஸ்.டி., பிடிக்க வேண்டுமா?– சந்திரன், மயிலாடுதுறைவிவசாயம் செய்து, அதை வழங்கலில் ஈடுபடும் விவசாயி, ஜி.எஸ்.டி., பதிவு செய்ய தேவையில்லை. நீங்கள் சாகுபடி செய்யும் பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., இல்லை.
பாக்கெட்டில் பொருட்களை அடைத்து, ‘லேபிள்’ ஒட்டி விற்பனை செய்தால், அது, ‘பிராண்டட்’ பொருள் என, பொருள்படுமா?– நாகேந்திரன், கோவில்பட்டிபாக்கெட்டில் பொருட்களை, ‘லேபிள்’ ஒட்டி விற்பனை செய்தால், அது, ‘பிராண்டட்’ பொருட்கள் என, கருதப்படாது. அத்தகைய பெயருக்கு, வியாபார நிறுவனம் காப்புரிமை அல்லது ‘டிரேட் மார்க்’ பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, அது, ‘பிராண்டட்’ பொருள் என, கருதப்படும்.
நாங்கள், இணக்க வரி விதிப்பு (காம்போசிஷன்) திட்டத்தை தேர்வு செய்துள்ளோம். நாங்கள், வரி விலைப் பட்டியல் வழங்கலாமா? அதில் வரி வசூல் செய்யலாமா?– பலராமன், புதுச்சேரிஇணக்க வரி விதிப்பை தேர்வு செய்த நபர், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய இயலாது. மேலும், அத்தகைய நபர், வரி விலைப் பட்டியல் வழங்காமல், அதற்கு மாற்றாக, விற்பனையின் போது வழங்கலுக்கான பட்டி (பில் ஆப் சப்ளை) ஒன்றை வழங்க வேண்டும். அதில் வழங்கலுக்கான விபரங்களை குறிப்பிட வேண்டும்.
வரி விலைப் பட்டியலில், ஜி.எஸ்.டி.,யின் விபரத்தை, தனித்தனியாக குறிப்பிட வேண்டுமா அல்லது மொத்த தொகையில் சேர்த்து காண்பித்தால் போதுமா?– கருணாகரன், காஞ்சிபுரம்ஜி.எஸ்.டி., சட்டத்தில், இதற்கென தனிப்பிரிவு உள்ளது. வரியின் விபரத்தை தெளிவாக, வரி விலைப் பட்டியலில் குறிப்பிட வேண்டும்.
உணவகங்களில் வாங்கும், ஸ்வச் பாரத் வரி, இனி, ஜி.எஸ்.டி.,யில் சேருமா? இல்லை, தனியாக வசூலிக்கப்படுமா?– பாலாஜி, உடுமலைஜி.எஸ்.டி., வந்தபின், ஸ்வச் பாரத் வரி மற்றும் க்ரிஷி கல்யாண் வரி, இனி வசூலிக்கப்பட மாட்டாது. முன் செலுத்திய இந்த வரியை, உள்ளீட்டு வரி பயனாக பெற இயலாது.
சார், நான், ‘பிராண்டு’ பெயரில், அரிசி மற்றும் ‘பிராண்டு’ அல்லாத அரிசி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளேன். ‘பிராண்டு’ உள்ள அரிசிக்கு, 5 சதவீத வரி, ‘பிராண்டு’ அல்லாத அரிசிக்கு, வரி ஏதும் விதிக்கப்படவில்லை. நான் ஒரே விலைப் பட்டியலில், இரண்டு வகை அரிசியையும் விற்பனை செய்ய இயலுமா?– ஜோசப், நெல்லைநீங்கள் கூறிய பரிவர்த்தனையில், ஒரே விலைப் பட்டியலில், வரியில்லாத அரிசியையும் சேர்த்து விற்பனை செய்யலாம்.
– ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|