பதிவு செய்த நாள்
20 ஆக2017
03:19
புதுடில்லி : மருந்து நிறுவனங்களின் நியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் போட்டு, மருந்து விலையை குறைக்க, தனி கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், அவற்றை சந்தைப்படுத்தும் நிறுவனங்களும், தங்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.மருத்துவக் கல்வி மாநாடு என்ற பெயரில், மருத்துவர்கள், குடும்பத்துடன் இலவசமாக வெளிநாடுகளை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்கின்றன. மேலும், உள்நாட்டு சுற்றுலா, வாகனம் மற்றும் விலை உயர்ந்த பரிசு பொருட்களும், மருத்துவர்களுக்கு வழங்கப்படுகின்றன.இதற்கு பிரதியுபகாரமாக, மருத்துவர்கள், அந்நிறுவனங்களின் மருந்துகளையே, அவை, அதிக விலை கொண்டவை என தெரிந்திருந்தும், நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர்.நிறுவனங்கள், முறையற்ற வழிகளில், மருந்துகளை சந்தைப்படுத்துவதால் ஏற்படும் செலவினத்தை, மருந்துகள்விலையில் சுமத்துகின்றன. இதனால், சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இது போன்ற முறையற்ற செயல்பாடுகளுக்கு முடிவு கட்ட, மருந்து விற்பனை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க, தனி அமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, புதிய மருந்து கொள்கை வரைவறிக்கை தயாரிக்கப்பட்டு, அனைத்து தரப்பினரின் கருத்துக்கேட்புக்காக வெளியிடப்பட்டு உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:சாதாரண மக்களும் வாங்கும் விலையில், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்க வேண்டும். அதே சமயம், மருந்து துறையும் நீடித்த, நிலையான வளர்ச்சி காண வேண்டும்.ஆனால், மருந்து விற்பனையில், லாப வரம்பு, நியாயமற்ற வகையில் உள்ளது. நிறுவனங்கள், ஸ்டாக்கிஸ்டுகள், வினியோகஸ்தர்கள், சில்லரை விற்பனையாளர்கள் உள்ளிட்டோர், பல்வேறு சலுகைகளை வழங்குகின்றனர்.மருந்து விலை, அபரிமிதமான லாப வரம்பில் நிர்ணயிக்கப்படுவது தான், இதற்கு காரணம். இதனால், சாதாரண மக்கள் மட்டுமின்றி, மருந்து துறையும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக,மருந்து விற்பனையில், லாப வரம்பை ஒரே சீராக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வரம்பு, அனைத்து தரப்பினருடன் பேசி தீர்மானிக்கப்படும். இதன் மூலம், மருந்து வர்த்தகம் சீராகும் என்பதுடன், மருந்து விலையும் குறையும்.இத்துடன், மருந்துகளை சந்தைப்படுத்தும் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அவற்றை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்படும். மருந்து துறைக்கு என, ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்த அமைப்பு, நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கும்.முதற்கட்டமாக, தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து மருந்துகளுக்கும், அவற்றின் தன்மை மற்றும் அளவை கருத்தில் கொள்ளாமல்,விலை நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|