பதிவு செய்த நாள்
11 செப்2017
23:50
புதுடில்லி : இதுவரை இல்லாத வகையில், ‘ஈக்யுட்டி மியூச்சுவல் பண்டு’ திட்டங்களில், ஆக., மாதம், 20,362 கோடி ரூபாய் நிகர முதலீடு செய்யப்பட்டு உள்ளது; இது, ஜூலையில், 12,762 கோடி ரூபாயாக இருந்தது.
சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில் முதலீடு செய்து வருவதும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்து, மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரசாரமும், இந்த உயர்வுக்கு துணை புரிந்துள்ளது. மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பங்குகளில் முதலீடு செய்யும், ‘ஈக்யுட்டி பண்டு’ உட்பட, பல திட்டங்களை நிர்வகித்து வருகின்றன. இதன்படி, 42 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பலவகை திட்டங்களின் கீழ் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், ஆகஸ்டில், 20.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; இது, ஜூலையில், 19.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், ‘ஈக்யுட்டி மியூச்சுவல் பண்டு’ திட்டங்களில், மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 2 சதவீதம் அதிகரித்து, 6.30 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 6.44 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 17 மாதங்களாக, ‘ஈக்யுட்டி மியூச்சுவல் பண்டு’களில், முதலீடு அதிகரித்து வருகிறது; இவற்றில் இருந்து, இறுதியாக, 2016 மார்ச்சில் தான், அதிகபட்சமாக, 1,370 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டது.
இது குறித்து, பஜாஜ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராகுல் பரிக் கூறுகையில், ‘‘ஆகஸ்டில், பங்குச் சந்தைகள் சரிவைக் கண்ட போதிலும், ஈக்யுட்டி மியூச்சுவல் பண்டில், முதலீடு அதிகரித்துள்ளது. ‘‘தவணையில் முதலீடு செய்ய உதவும், எஸ்.ஐ.பி., திட்டங்களும், பங்கு விலை சரிவால் அதிகரித்த முதலீடுகளும், இந்த உயர்வுக்கு காரணம்,’’ என்றார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், நாடு, வெளிப்படையான பொருளாதாரத்திற்கு மாறி வருகிறது. வருவாய்க்கு கணக்கு காட்டி, வரி செலுத்துவது அதிகரித்து உள்ளதால், நிதியினங்களில் முதலீடுகள் உயர்ந்து வருவதாக, சந்தையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, ‘மார்னிங்ஸ்டார்’ நிறுவன ஆய்வு பிரிவு இயக்குனர், கவுஸ்துப் பெலாபுர்கர் கூறியதாவது: மூன்று ஆண்டுகளாக, குறிப்பாக, 2016ல், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பால், ‘ஈக்யுட்டி பண்டு’களில் முதலீடுகள் அதிகரித்தன. இதற்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மியூச்சுவல் பண்டுகளின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஆகியவையும் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
அமோக வரவேற்பு:
மியூச்சுவல் பண்டுகளில், எஸ்.ஐ.பி., எனப்படும், தவணையில் முதலீடு செய்யும் திட்டம், சில்லரை முதலீட்டாளர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதில், வாரம், மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என, மிகக் குறைவான தொகையை முதலீடு செய்யலாம். இந்த முறையில், தற்போது, மாதம், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|