பதிவு செய்த நாள்
25 செப்2017
01:04
இந்திய பங்குச் சந்தையில், எஸ்.ஐ.பி., முதலீட்டு முறையைக் கடைபிடித்து, இந்திய முதலீட்டாளர்கள், ஒவ்வொரு மாதமும் தவறாமல், 5,200 கோடி ரூபாயை முதலீடு செய்கின்றனர். இது, நம் பங்குச் சந்தை வரலாற்றிலேயே ஒரு சாதனை!
எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்தால், வெற்றி நிச்சயம் கிடைக்குமா? அதிகமான லாபம் பெற இந்த முறை வழி வகுக்குமா? நம் முதலுக்கு எந்த வகையிலும் நஷ்டம் வராமல், இந்த முறையில் காக்க முடியுமா? இதுபோன்ற பல கேள்விகள் தொடர்ந்து நம் சந்தையில் எழுப்பப்படுகின்றன. முதலில், இதன் அடிப்படையைப் புரிந்து கொள்வது அவசியம். மாதம்தோறும் தவணை முறையில் முதலீடு செய்யும் முறையே, ’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்.’ சுருக்கமாக, எஸ்.ஐ.பி. என்பர்.மாதம் குறைந்தபட்சம், 500 ரூபாயைக் கூட முதலீடாக பங்குச் சந்தையில் செலுத்த வழிவகுக்கும் முதலீட்டு முறையே இது. இந்த முதலீட்டு முறை, சந்தையின் ஏற்ற இறக்கங்களில் இருந்து நம்மை பாதுகாக்க ஒரு யுத்தியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.சந்தை உச்சத்தில் இருக்கும்போது, அதிக பண முதலீடுசெய்துவிட்டு, பிறகு சந்தை இறங்குமுகம் காணும்போது, செய்வதறியாது தவிக்கும் பெரும்பான்மை முதலீட்டாளர்களுக்கு, ஒரு மாற்றாக மட்டுமேஇந்த முறை வரவேற்பு பெற்றிருக்கிறது.ஒவ்வொரு காளைச் சந்தையிலும், மக்கள், சந்தைக்குள் மந்தை மந்தையாகப் புகுந்து, மொத்த பணத்தையும் முதலீடு செய்வதும், பிறகு சந்தைஇறக்கம் காணும்போது, அந்தப் பணத்தை எடுத்து சந்தையில் இருந்து வெளியேறுவதும்மட்டுமே நம் சந்தையின் வரலாறு.இந்த ரொக்க முதலீடு ஏற்படுத்தும் பாதகங்களைத் தவிர்க்கவே எஸ்.ஐ.பி., முறை அறிவுறுத்தப்படலாம். ஆகவே, இதை ஒரு வெற்றிக்கான வழியாகப் பார்ப்பதைவிட, படுதோல்விகளைத் தவிர்க்கும் யுத்தியாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும்.எஸ்.ஐ.பி., முறையின் கடந்த கால வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம். கடந்த காளைச் சந்தையில், பெருவாரியான இவ்வகை முதலீடுகள் உள்கட்டமைப்பு துறையிலும், மின் உற்பத்தி துறையிலும் அதிகம் குவிந்தன. இந்த முதலீடுகள் படுதோல்வி அடைந்ததை இந்த தருணத்தில் நினைவு கூர்வது நல்லது.அதேபோல், 2,000ம் ஆண்டில் கண்ட, காளைச் சந்தையின் எஸ்.ஐ.பி., பெரும்பாலும் மென்பொருள் சார்ந்த நிறுவனங்களில் குவிந்தது வரலாறு. இந்த முதலீடுகளும் பெரும் நஷ்டத்தையே தந்தன.ஆகவே, கண்மூடித்தனமாக முதலீடு செய்தால், இந்த முதலீட்டு முறையில் சாதகங்களைவிட பாதகங்களையே அதிகம் சந்திக்க நேரிடும். இதனால், இம்முதலீட்டு முறை பாதகமானது என்றும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது. ஏனெனில், புளூசிப் நிறுவனப் பங்குகளிலும், பெருநிறுவன பங்குகளிலும் செய்யும் இவ்வகை முதலீடுகள் அதிகம் வெற்றி பெற்றுள்ளன.ஆகவே, எஸ்.ஐ.பி.,யில் வெற்றி- – தோல்விகள், நம் முதலீட்டு தேர்வுகளின் அடிப்படையில்தான் அமையும் என்பதை உணர்வது மிக அவசியம்.குறுகிய, கடந்த கால லாப நிகழ்வுகளைக் கொண்டு எடுக்கப்படும், எஸ்.ஐ.பி., முடிவுகள், தோல்வி காணக்கூடும். மேலும், இந்த முறையில், தொடர்ந்து பல ஆண்டுகள், ஒழுக்கமான முறையில், தடை ஏற்படாதவண்ணம் முதலீடு செய்யவேண்டியது அவசியம். இதை மனதில் கொண்டு, முதலீட்டு தேர்வுகளை மிக கவனமாகவும், நிதானமாகவும், தொலைநோக்கோடும் எடுப்பதே எஸ்.ஐ.பி., முதலீடுகளின் வெற்றி ரகசியம்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|