பதிவு செய்த நாள்
04 அக்2017
23:47
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள நிதிக் கொள்கையில், ‘வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, மாற்ற மின்றி, 6 சதவீதமாக தொடரும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, இரு மாதங்களுக்கு ஒருமுறை, அதன் நிதிக் கொள்கையை அறிவித்து வருகிறது. இதன்படி, மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தலைமையிலான, நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம், இரு நாட்களாக நடந்தது. நேற்று, ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், உர்ஜித் படேல், நிதிக் கொள்கை அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ‘வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி, மாற்றமின்றி, 6 சதவீதமாக தொடர வேண்டும்’ என, ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அது போல, வங்கிகள் திரட்டும் டிபாசிட்டில், ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதம், மாற்றமின்றி, 4 சதவீதமாக தொடரும். அதே சமயம், வங்கிகள், தங்கம், கடன் பத்திரங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளும், கட்டாய முதலீட்டு விகிதம், 0.50 சதவீதம் குறைக்கப்பட்டு, 19.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்டில், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது; இது, தற்போது, 6.7 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடுத்தர கால அளவில், சில்லரை பணவீக்க இலக்கை, 4 சதவீதத்திற்குள் கட்டுக்குள் வைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், நடுநிலையுடன், நிதிக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.
இரு மாதங்களில், சர்வதேச பொருளாதாரம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் புயல் பாதிப்பு, டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உள்நாட்டில், மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, ஆய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, வேளாண் மற்றும் துணை துறைகளின் உற்பத்தி மதிப்பு வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில் குறைந்துள்ளது. கரீப் பருவ உணவு தானிய உற்பத்தி குறித்த, முன்கூட்டிய மதிப்பீடும், திருப்திகரமாக இல்லை. ஜூலையில் அறிமுகமான, ஜி.எஸ்.டி., இதுவரை, எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே தோன்றுகிறது. அதனால், குறுகிய கால அளவில், தயாரிப்புத் துறையின் வளர்ச்சியை, உறுதிப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி:
ஆகஸ்டில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கையில், ‘நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.3 சதவீதமாக இருக்கும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாக, நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதமாக குறைந்துள்ளதை அடுத்து, ரிசர்வ் வங்கி, மதிப்பீட்டை குறைத்துள்ளது. ‘அடுத்த அரையாண்டில், நாட்டின் பணவீக்கம், 4.2 – 4.6 சதவீதத்திற்குள் இருக்கும்’ என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது, முழு நிதியாண்டிற்கான இலக்கு அளவான, 4 சதவீதத்தை விட அதிகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|