பதிவு செய்த நாள்
13 அக்2017
05:58
புதுடில்லி : நாட்டின் தொழில்துறை உற்பத்தி, ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில் அதிகரித்து உள்ளது. செப்டம்பரில் சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக குறைந்ததை அடுத்து, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு, ஆறுதல் தரும் விதமாக, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மற்றும் சில்லரை பணவீக்கம் குறைவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: நாட்டின் தொழில் துறை உற்பத்தி, ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில், 4.3 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, ஜூலையில், 1.2 சதவீதமாக அறிவிக்கப்பட்டு, மறுமதிப்பீட்டில், 0.94 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4 சதவீதமாக இருந்தது. இதற்கு முன், 2016 நவம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, அதிகபட்சமாக, 5.7 சதவீதத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. சுரங்கம், மின்சாரம் மற்றும் பொறியியல் சாதனங்கள் துறைகளின் செயல்பாடு காரணமாக, தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது.
சுரங்கம் மற்றும் மின் துறைகளின் வளர்ச்சி, 2016 ஆக., உடன் ஒப்பிடும் போது, இந்தாண்டு ஆகஸ்டில், முறையே, 9.4 சதவீதம் மற்றும் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளன. இதே காலத்தில், அடிப்படை பொருட்கள், பொறியியல் சாதனங்கள், அடிப்படை கட்டமைப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்தி, முறையே, 7.1 சதவீதம், 5.4 சதவீதம் மற்றும், 2.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்து உள்ளன. இதே காலத்தில், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் சாரா சாதனங்கள் துறைகளின் வளர்ச்சி, முறையே, 1.6 சதவீதம் மற்றும் 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொழில் துறை உற்பத்தி குறியீட்டை கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்கு, 77.63 சதவீதமாக உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இத்துறையின் உற்பத்தி, 5.5 சதவீதத்தில் இருந்து, 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தபோதிலும், ஆகஸ்டில், தயாரிப்பு துறையைச் சேர்ந்த, 23 தொழில் பிரிவுகளில், 10 பிரிவுகள் வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக, கம்ப்யூட்டர், மின்னணு மற்றும் கண்ணாடி பொருட்கள் துறை, 24.9 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, மருந்து, மருத்துவ ரசாயனம், உயிரியல் பொருட்கள் துறை, 16.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவ மழையால் சாதகம்:
நாட்டின் சில்லரை பணவீக்கம், செப்டம்பரில், 3.28 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஆகஸ்டில், 3.36 சதவீதமாக இருந்தது. பருவ மழையைத் தொடர்ந்து, உணவுப் பொருட்கள் விலை குறைந்ததால், சில்லரை பணவீக்கம் சரிவடைந்துள்ளது. உணவுப் பொருட்களின் சில்லரை பணவீக்கம், 1.25 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஆகஸ்டில், 1.52 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், எரிபொருள் பணவீக்கம், 4.94 சதவீதத்தில் இருந்து, 5.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|