பதிவு செய்த நாள்
20 அக்2017
00:22
புதுடில்லி : ‘இந்தியாவில் புகையிலை, நுகர்பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், மது, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் ஆகிய துறைகளில், சட்ட விரோத வர்த்தகம் அதிகரித்து வருகிறது’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான, ‘பிக்கி,’ ஆலோசனை நிறுவனமான, ‘கே.பி.எம்.ஜி.,’ உடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: இந்தியாவில் நுகர்பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட, பல்வேறு துறைகளில், சட்ட விரோதமான வர்த்தகப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. ஒரு பொருளுக்கு விலைப் பட்டியல் வழங்கி, வேறு பொருளை விற்பது, பொருளின் மதிப்பை குறைத்து காட்டுவது, பொருளின் கடைநிலை பயன்பாட்டை திரித்து கூறுவது, போலி பொருட்கள் தயாரித்து விற்பது உள்ளிட்ட, பலவிதமான முறைகேடுகள் நடக்கின்றன.
கடந்த, 2016ல், விலைப் பட்டியலுக்கு மாறாக விற்கப்பட்ட, 1,187 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது. இப்பிரிவின் அதிரடி சோதனையில், 254 கோடி ரூபாய் அளவிற்கு, பொருட்களின் மதிப்பு குறைத்து காட்டப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. கடைநிலை பயன்பாட்டை திரித்து கூறி விற்கப்பட்ட, 770 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இத்துடன், போலி பொருட்கள் உள்ளிட்ட பிற வழிகள் மூலம், மொத்தம், 2,780 கோடி ரூபாய் அளவிற்கு, வர்த்தக முறைகேடு நிகழ்ந்துள்ளது; இது, 2015ல், 953 கோடி ரூபாயாக இருந்தது.
ஆக, ஒரே ஆண்டில், வர்த்தக முறைகேட்டின் அளவு, 191 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை தடுப்பதற்கான கொள்கைகளை, அரசு உருவாக்கி வருவதற்கேற்ப, முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன. அதனால், மாநில அரசுகளும், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் இணைந்து, வணிக முறைகேடுகளை தடுக்க, நிலையான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். புகையிலை, மது, கம்ப்யூட்டர் ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள், நுகர்பொருட்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், மொபைல் போன்கள் போன்றவற்றில், அதிகளவு போலிகளும், முறைகேடான வர்த்தகமும் நடக்கின்றன.
கடந்த, 2010 – 15 நிலவரப்படி, சட்ட விரோத சிகரெட் விற்பனை, 5,775 கோடி ரூபாய் உயர்ந்து, 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போல, 2014ல், கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட நுகர்வோர் சாதனங்களால், அத்துறைக்கு, 19,243 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், அரசுக்கு மட்டும், 5,954 கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது. போலி பொருட்களால், வாகன உதிரி பாகங்கள் துறையின் இழப்பு, 2012 – 14ல், 9,198 கோடி ரூபாயில் இருந்து, 10,501 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|