பதிவு செய்த நாள்
29 அக்2017
04:37
புதுடில்லி, அக். 29–‘பிளிப்கார்ட், அமேசான்’ உள்ளிட்ட மின்னணு வணிக நிறுவனங்கள், ஒரே மாதத்தில், 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருட்களை விற்பனை செய்து, புதிய சாதனை படைத்துள்ளன.இந்நிறுவனங்கள், பண்டிகை காலத்தை முன்னிட்டு, கவர்ச்சிகரமான சலுகைகளுடன், சிறப்பு விற்பனை திட்டங்களை அறிவித்திருந்தன.இதற்கு, நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து, இணைய சந்தை ஆய்வு நிறுவனமான, ‘ரெட்சீர்’ வெளியிட்டுள்ள அறிக்கை:செப்., 20 – அக்., 19 வரையிலான காலத்தில், மின்னணு வணிக நிறுவனங்களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில், 320 கோடி டாலர், அதாவது, 19 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட, அதிகபட்ச விற்பனையாகும். 2016ல், இதே காலத்தில், மின்னணு வணிக நிறுவனங்களின் விற்பனை, 220 கோடி டாலராக இருந்தது.ஆக, கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, மதிப்பீட்டு காலத்தில், விற்பனை, 45 சதவீதம் அதிகரித்துள்ளது.இதற்கு, மின்னணு வணிகத்தில் முன்னணியில் உள்ள, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள், பெருமளவு துணை புரிந்துள்ளன.மின்னணு வணிக நிறுவனங்களின் அபரிமிதமான விற்பனைக்கு, பல காரணங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள், சமீப காலத்தில், அதிக அளவிற்கு நிதி திரட்டிக் கொண்டன. இது, அவற்றின் வர்த்தகத்தை மேம்படுத்த துணை புரிந்துள்ளது.இந்தாண்டு பண்டிகை காலத்தில், மின்னணு வணிக நிறுவனங்கள், பொருட்களுக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களை வகைப்படுத்தி, தள்ளுபடி சலுகைகளை அறிவித்தன.அத்துடன், மக்களிடம், வலைதளத்தில் பொருட்கள் வாங்குவது குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே, விரும்பிய பொருட்களை சுலபமாக வாங்க முடிவதால், ஏராளமானோர், வலைதள விற்பனை நிறுவனங்களை நாடுகின்றனர்.ரிலையன்ஸ் குழுமத்தின், ‘ஆர்ஜியோ’ மொபைல் போன் சேவையும், மின்னணு வணிக வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இலவச அழைப்பு மற்றும் இணைய வசதியுடன் கிடைக்கும் இச்சேவை காரணமாக, வலைதளங்களை பார்வையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவும், மின்னணு வணிக நிறுவனங்களின் விற்பனை பெருக, துணை புரிந்துள்ளது.பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள், அவற்றின் வலைதளம் வாயிலான விற்பனை, இந்தியாவில் நகரங்களை தாண்டி, உட்பகுதிகளிலும் விரிவடைந்து வருவதாக கூறியுள்ளன. குறிப்பாக, மிகச்சிறிய நகரங்கள் மற்றும் புற நகரங்களில் இருந்து, புதிய வாடிக்கையாளர்கள் அதிகளவில் கிடைப்பதாக, அவை தெரிவித்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நானே ராஜாசமீபத்திய பண்டிகை காலத்தில், வலைதளம் வாயிலான விற்பனையில், ‘நம்பர் – 1’ யார் என்பதில், ‘அமேசான் – பிளிப்கார்ட்’ இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும், விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறுகின்றன. இதனிடையே, வலைதள விற்பனையில் புதிதாக நுழைந்த, ‘பேடிஎம் மால்’ 20 சதவீத சந்தை பங்கை கைப்பற்றி உள்ளதாக சொல்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|