பதிவு செய்த நாள்
21 நவ2017
03:37
மும்பை, நவ. 21–மத்திய அரசு, ‘கிரவுட் பண்டு’ முறையில், முதலீடுகளை திரட்டும் நிறுவனங்களுக்கு, இந்திய நிறுவனங்கள் சட்டத்தில் இருந்து, விலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது, இணையம் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் தனிப்பட்ட நபர்களிடம் இருந்து முதலீடுகளை திரட்டி, தொழில் துவங்குவது அதிகரித்து வருகிறது. அந்த தொழிலில் கிடைக்கும் லாபம், முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.இத்தகைய கூட்டு முதலீட்டு நடைமுறை, ‘கிரவுட் பண்டு’ என, அழைக்கப்படுகிறது.இந்த வகையில் திரைப்படங்களை தயாரிப்பது, இசை ஆல்பங்கள் உருவாக்குவது, நுால் வெளியீடு, புகைப்படம், சுற்றுலா என, பல்வேறு திட்டங்களுக்காக கூட்டு முதலீடு திரட்டப்படுகிறது.இத்தகைய முதலீடுகளை திரட்டித் தருவதற்கென, ‘இம்பாக்ட் குரு, மிலாப், கெட்டோ, விஷ்பெரி’ போன்ற பல நிறுவனங்கள் உள்ளன. தனிப்பட்ட முறையிலும், பலர் முதலீடுகளை திரட்டுகின்றனர்.இத்தகைய கூட்டு முதலீட்டு நிறுவனங்களை, அமைப்பு ரீதியில் கொண்டு வந்தால், அதன் மூலம் பல்வேறு துறைகள் பயன் பெறும் என, மத்திய அரசு கருதுகிறது.ஆனால், இந்திய நிறுவனச் சட்டத்தின், 42வது பிரிவு, கூட்டு முதலீட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இப்பிரிவு, ‘ஒரு நிறுவனம், ஒரு திட்டத்தின் கீழ், 50 பேரிடம் மட்டுமே முதலீட்டை திரட்டலாம்’ என, கூறுகிறது.இந்த வகையில், ஒரு நிறுவனம், ஓராண்டில், 200 பேரிடம் முதலீட்டை பெறலாம். அதற்கு மேற்பட்ட நபர்கள் முதலீடு மேற்கொண்டால், கண்டிப்பாக அந்நிறுவனம் பங்கு வெளியீட்டில் களமிறங்கி, பங்குச் சந்தையில் பங்குகளை பட்டியலிட வேண்டும்.தற்போது, சமூக வலைதளங்கள் வாயிலான, கூட்டு முதலீட்டு திட்டங்களில், இந்த எண்ணிக்கையை விட அதிகமானோரிடம் நிதி திரட்டப்படுகிறது.இந்த கூட்டு முதலீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த, எந்த அமைப்பும் இல்லை. மேலும், இவை திரட்டும் முதலீடுகள் குறித்த விபரங்களும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு தெரியவருவதில்லை.இத்தகைய அம்சங்களை கருதி, ‘கிரவுட் பண்டு’ நிறுவனங்களுக்கு, இந்திய நிறுவனங்கள் சட்டத்தின், 42வது பிரிவில் இருந்து விலக்கு அளித்து, ‘செபி’யின் சட்ட விதிகளின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், கூட்டு முதலீட்டு நடைமுறை, அமைப்பு சார்ந்ததாக மாறும். அதிக நம்பகத்தன்மை காரணமாக, முதலீடுகள் அதிகரிக்கும். இதன் மூலம், புதுமையான திட்டங்கள் கைவசம் இருந்தும், முதலீடின்றி தவிக்கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முதன் முறையாகஇந்தியாவில், முதன் முறையாக, 1976ல், ‘கிரவுட் பண்டு’ முறையில் தயாரிக்கப்பட்ட படம், மன்தன். தேசிய விருது பெற்ற இத்திரைப்படத்தை, ஷியாம் பெனகல் இயக்கினார். இதை தயாரிக்க, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துவோர் கூட்டமைப்பைச் சேர்ந்த, ஐந்து லட்சம் விவசாயிகள்,தலா, இரண்டு ரூபாய் வழங்கினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|