பதிவு செய்த நாள்
27 டிச2017
23:55
புதுடில்லி : ‘‘வரும் புத்தாண்டில், விவசாயம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு, ஊட்டச்சத்து குறைபாடின்மை உள்ளிட்டவற்றுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கும் செயல் திட்டங்கள் உருவாக்கப்படும்,’’ என, ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர், ராஜிவ் குமார் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மோடியின், ‘புதிய இந்தியா – 2022’ தொலைநோக்கு கொள்கையை வடிவமைப்பது, கடினமான, சவாலான பணியாகும். இக்கொள்கையை உருவாக்குவது தொடர்பாக, பல்வேறு அமைப்புகளுடன் பேச்சு நடத்தி உள்ளோம். அதன்படி மேற்கொள்ளப்பட்ட கொள்கை வடிவமைப்பு பணி, தற்போது இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது. விரைவில், இப்பணி முடிவடையும். இதையடுத்து, 15 ஆண்டு தொலைநோக்கு கொள்கை திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.
நிடி ஆயோக், குறுகிய கால செயல்பாடுகளுக்கு, 3 ஆண்டு; நடுத்தர காலத்திற்கு, 7 ஆண்டு; நீண்ட கால நடவடிக்கைக்கு, 15 ஆண்டுகள் என, மூன்று வகையான கொள்கை திட்டங்களை உருவாக்க, ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. புத்தாண்டில், விவசாயம், ஊட்டச்சத்து குறைபாடின்மை, உயர் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு, கூடுதல் கவனம் செலுத்தப்படும். நிடி ஆயோக், ‘கூட்டுறவு மற்றும் கூட்டாட்சியில் போட்டித் தன்மை’ என்ற இரு இலக்கை முன்வைத்து செயல்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே, 11 மாநிலங்களுக்குச் சென்று, ஆலோசனை நடத்தி உள்ளேன்; மேலும் பல மாநிலங்களுக்கு செல்ல உள்ளேன். அம்மாநில அரசுகளுடன் இணைந்து, அந்தந்த மாநிலங்களின் கட்டமைப்புக்கு ஏற்ற வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்வடிவம் தரப்படும். நிடி ஆயோக் உடன் இணைந்து செயல்பட, மாநில அரசுகளும் ஆர்வமாக உள்ளன. இந்தியாவில், தனியார் முதலீடுகள் அதிகரித்துள்ளன; தரமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
அதன்படி, 2018 – 19ம் நிதியாண்டில், அக்., – டிச., வரையிலான, மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.5 சதவீதமாக உயரும்; இது, அடுத்த இரு ஆண்டுகளில், 8 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், தொழில் துவங்குவது மேலும் சுலபமாகும். முதலீட்டிற்கான விதிமுறைகள் இன்னும் எளிமையாக்கப்படும். பல துறைகளில், அமைப்பு சார்ந்த பிரிவின் பங்கு, பெரும்பான்மையாக மாறும். அதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்றுமதி:
உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், ஏற்றுமதிக்கு முக்கிய பங்கு உள்ளது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகத்திடம், அறிக்கை அளித்துள்ளோம். அதில், அதிக வேலைவாய்ப்புள்ள ஏற்றுமதிகள் குறித்த பட்டியலை இணைத்துள்ளோம்.
-ராஜிவ் குமார்,துணைத் தலைவர், ‘நிடி ஆயோக்’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|