பதிவு செய்த நாள்
04 ஜன2018
00:10
சென்னை:மணல், சிமென்ட், கம்பி விலை உயர்வால், அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான செலவு, 1 சதுர அடிக்கு, 400 ரூபாய் உயர்ந்து உள்ளதாக, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘கிரெடாய்’ நிர்வாகிகள் தெரிவித்தனர்.இது குறித்து, ‘கிரெடாய்’ சென்னை பிரிவு தலைவர், சுரேஷ் கிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், ஆறு மாதங்களுக்கு முன், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மணலின் விலை, 1 கன அடி, 35 ரூபாயாக இருந்தது. இது தற்போது, 135 ரூபாயாக அதிகரித்துள்ளது. சிமென்ட் விலை, ஒரு மூட்டை, 270 ரூபாயில் இருந்து, 330 ரூபாயாக உயர்ந்துள்ளது.டி.எம்.டி., கம்பிகள் விலை, 1 டன், 34 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது, 47 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இத்துடன் செராமிக் பதிகற்கள், மின் ஒயரிங் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.இந்த திடீர் விலை உயர்வு காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான செலவு, சதுர அடிக்கு, 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இதை, வீட்டின் விலையில் சேர்ப்பதை தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.இதனால், நான்கு தளங்கள் வரையிலான குடியிருப்புகளில், வீட்டின் விலையில் கட்டுமான செலவு மட்டும், சதுர அடிக்கு, 3,000 ரூபாயில் இருந்து, 3,400 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பெரிய நிறுவனங்கள் புதிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பதை நிறுத்தி விட்டன. இதே போன்று, வீடுகள் விற்பனையின் மீது மத்திய அரசு விதித்துள்ள, ஜி.எஸ்.டி.,யில், நிலத்தின் மதிப்பு சேர்க்கப்படுவதால், வீடுகள் விற்பனை விலையில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைகளால், 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் முடங்கி உள்ளன; 10 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|