பதிவு செய்த நாள்
04 மார்2018
00:17
வாஷிங்டன்:‘அமெரிக்கா, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு வரி விதித்தால், அது, அந்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என, பன்னாட்டு நிதியம் எச்சரித்து உள்ளது.
அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், ‘உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்க, உருக்கு மற்றும் அலுமினியத்திற்கு முறையே, 25 மற்றும், 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும்’ என, அறிவித்துள்ளார்.இது, அமெரிக்காவுக்கு உருக்கு, அலுமினியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும், சீனா, கனடா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘இந்த வரி விதிப்பு, ஏற்க முடியாதது’ என, கனடா, ஜெர்மனி ஆகியவை தெரிவித்து உள்ளன. ‘அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆணைய தலைவர், ஜீன் கிளாட் ஜன்கர் எச்சரித்து உள்ளார்.
இதற்கு, டிரம்ப், ‘டுவிட்டரில்’ எகத்தாளமாக கூறியிருப்பதாவது:வெளிநாடுகள், வரிச்சலுகை என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வரியின்றி இறக்குமதியாகும் பொருட்களால், அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களை இழக்கிறது.
உள்நாட்டு நிறுவனங்களும், அதை சார்ந்துள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.இதை தடுக்கவே, உருக்கு, அலுமினியத்திற்கு இறக்குமதி வரி விதிக்க உள்ளோம்.இதற்கு, வெளிநாடுகள் பதிலடி கொடுக்க விரும்பினால், அமெரிக்கா அதை வரவேற்கும். இந்த வர்த்தகப் போரில், அமெரிக்காவே இறுதியில் வெல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பன்னாட்டு நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கெரி ரைஸ் கூறியதாவது:டிரம்ப் முடிவால், வெளிநாடுகளுக்கு மட்டுமின்றி, அமெரிக்காவுக்கும் பாதிப்பு உண்டாகும். அந்நாட்டில், அதிகளவில் உருக்கு மற்றும் அலுமினியம் பயன்படுத்தும், கட்டுமானம் மற்றும் தயாரிப்புத் துறைகள் பாதிக்கப்படும்.அதுமட்டுமின்றி, அமெரிக்காவை பின்பற்றி, இனி அந்தந்த நாடுகள், உள்நாட்டு நலனை பாதுகாப்பதாக கூறி, இத்தகைய நடைமுறைகளை கையாளும். இது, சர்வதேச அளவில், வர்த்தக ஒழுங்குமுறையை சீர்குலைக்கும்.
அதனால், அமெரிக்கா, இப்பிரச்னையில் பிற நாடுகளுடன் இணைந்து பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|