பதிவு செய்த நாள்
22 மார்2018
00:39
புதுடில்லி : குறுப்பிட்ட காலத்தில் முடிக்கப்படும் திட்டங்கள், பணிகள் போன்றவற்றுக்கு தேவையான தொழிலாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் வசதி, அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது, ஆயத்த ஆடைகள் துறையில் மட்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த, தொழில் நிறுவனங்கள் சட்டம், வகை செய்கிறது. இதை, அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தி, சட்ட திருத்தம் செய்துள்ளதாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேரடி நியமனம்:
இதனால், பல்வேறு துறைகளில், பருவ கால பணிகளுக்கு தேவையானவர்களை, நிறுவனங்கள் சுலபமாக பணியமர்த்திக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கும், இந்த சட்ட திருத்தம் உறுதி அளிக்கிறது. தற்போது, பெரும்பாலான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர் மூலமாகவே, தற்காலிக பணிக்கான தொழிலாளர்களை ஒப்பந்தம் செய்கின்றன.
நிறுவனம், ஒப்பந்த தொழிலாளருக்கு நிர்ணயிக்கும் ஊதியத்தில், ஒரு பகுதியை, ஒப்பந்ததாரர், தனக்குரிய கட்டணமாக எடுத்துக் கொள்கிறார். அதனால், ஒப்பந்த தொழிலாளருக்கு, ஊதியம் குறைவாகவே கிடைக்கிறது. மேலும், ஒரு நிறுவனத்தில், நிரந்தர பணியாளர்கள் பெறும் அனைத்து சலுகைகளும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த முரண்பாடுகளுக்கு, தற்போது முடிவு கட்டப்பட்டுள்ளது.
புதிய சட்ட திருத்தத்தில், இனி, அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும், ஒப்பந்ததாரர் தயவின்றி, நேரடியாக தற்காலிக பணியாளர்களை நியமிக்கலாம்.
ஊதியம்:
ஒரு நிறுவனத்தில், ஒரு பிரிவில் நிரந்தர பணியாளர்கள் பெறும் ஊதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், அதே பிரிவில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கும் கிடைக்கும். நிரந்தர பணியாளர்களுக்கு நிகரான, பணி நேரம், ஊதியம் மற்றும் சலுகைகள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கிடைக்கும். மத்திய அரசு, ஒப்பந்த தொழிலாளர் நடைமுறையை, அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தியிருப்பது, மிகப் பெரிய அளவில், சர்வதேச முதலீடுகளை ஈர்க்க துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளருக்கான முக்கிய அம்சங்கள்:
* தொடர்ந்து மூன்று மாதங்கள் பணியாற்றியவரை, ஒப்பந்த காலத்திற்கு முன் நீக்க விரும்பினால், அவருக்கு, இரு வாரங்களுக்கு முன், நிறுவனம், ‘நோட்டீஸ்’ அளிக்க வேண்டும்
* மூன்று மாதங்களுக்கு உள்ளாக ஒருவரை நீக்க வேண்டுமென்றால், அதற்கான காரணங்களை நிறுவனம், எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்
* ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோரை, ‘நடத்தை சரியில்லை’ என நீக்க முயன்றால், பணியாளர், விளக்கம் அளிக்க, நிறுவனம் வாய்ப்பு வழங்க வேண்டும்
* ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில், ஒருவரை பணி நீக்கம் செய்ய முடியாது.
மீண்டும்...
கடந்த, 2003ல், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், தற்காலிக பணியாளர் நியமனத்திற்கு அனுமதி அளித்தார். இதை, 2007ல், பிரதமர் மன்மோகன் சிங் அரசு, ரத்து செய்தது. தற்போது, மோடி அரசு, மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|