பதிவு செய்த நாள்
29 மார்2018
00:40
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’, நிறுவனங்களின் நிர்வாகச் செயல்பாடுகள், பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்டு முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நேற்று, ‘செபி’ தலைவர், அஜய் தியாகி தலைமையில், இயக்குனர் குழு கூட்டம், டில்லியில் நடைபெற்றது. இது குறித்து, அஜய் தியாகி கூறியதாவது: நிர்வாக மேம்பாடு, பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவை தொடர்பாக, உதய் கோட்டக் தலைமையிலான குழு அளித்த, 80 பரிந்துரைகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவற்றில், எந்தவிதமான திருத்தங்களும் செய்யாமல், 40 பரிந்துரைகளை ஏற்பது என, தீர்மானிக்கப்பட்டது. மேலும், 15 பரிந்துரைகளில் திருத்தம் செய்யவும், 18 பரிந்துரைகளை நிராகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில், 2020 ஏப்ரல் முதல், முன்னணியில் உள்ள, 500 நிறுவனங்களின் சந்தை மதிப்பு அடிப்படையில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பு, பிரிக்கப்படும். ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில், தனி இயக்குனர்களின் எண்ணிக்கை, 10ல் இருந்து, எட்டாகக் குறைக்கப்படும்.
பங்குச் சந்தை நிறுவனங்களுக்கு, அவற்றின் அமைவிடத்திற்கு அருகே, உறுப்பினர்கள், பங்குத் தரகு சேவை மேற்கொள்ள அனுமதிக்கும் உரிமம் வழங்கப்படும். மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூடுதல் செலவினம், 0.50 சதவீதத்தில் இருந்து, 0.20 சதவீதம் குறைக்கப்படும். இதன் மூலம், மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு செலவு குறையும். இது போன்ற முக்கிய பரிந்துரைகளை ஏற்பது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
உதய் கோட்டக் குழு அளித்துள்ள இதர முக்கிய பரிந்துரைகள்:
* ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழு தலைவராக, செயல்சாரா இயக்குனரை நியமிக்கலாம்
* ஒரு இயக்குனர் குழு, குறைந்தபட்சம் ஆறு பேரை கொண்டிருக்க வேண்டும்
* இயக்குனர் குழுவில், குறைந்தது, 50 சதவீதம் தனி இயக்குனர்களை நியமிக்க வேண்டும்
* இயக்குனர் குழுவில், குறைந்தபட்சம் ஒரு பெண் இடம் பெற வேண்டும்
* 75 வயதுக்கு மேற்பட்டவரை, செயல்சாரா இயக்குனராக நியமிக்க, சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும்
* தனி இயக்குனர்களுக்கு, குறைந்தபட்சம் ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்
* நிறுவனத்தின் நிகர லாபத்தில், 2.5 சதவீதம் அல்லது 5 கோடி ரூபாய்க்கு மேல் செயல் நிறுவனர் இயக்குனர்களுக்கு ஊதியம் அளிப்பதாக இருந்தால், பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதல் தேவை
* அனைத்து செயல் சாரா இயக்குனர்களின் மொத்த ஊதியத்திற்கு நிகராக, செயல்சாரா இயக்குனர் ஒருவருக்கு ஊதியம் வழங்க வேண்டுமென்றால், பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதல் வேண்டும்
* தனி இயக்குனர்கள், ஒப்பந்த காலத்திற்கு முன், பணியில் இருந்து விலகினால், அதற்கான காரணங்களுடன் முழு விபரங்களை வழங்க வேண்டும்
* ஒரு நிதியாண்டில், குறைந்தது, ஐந்து முறை, இயக்குனர் குழு கூட்டம் நடைபெற வேண்டும்
* ஒரு நிதியாண்டு முடிந்த ஐந்து மாதங்களுக்குள், ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|