பதிவு செய்த நாள்
04 ஏப்2018
00:52
புதுடில்லி:''புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும், தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த, அமெரிக்காவின் 'சிலிக்கான் வேலி' போல, இந்தியாவிலும் உருவாக்க முடியும்,'' என, உலக வங்கியின், இந்தியாவிற்கான இயக்குனர், ஜூனைத் கமல் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர், வளரும் நாடுகளின் கண்டுபிடிப்புகள் தொடர்பான, உலக வங்கியின் அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்பிராசிஸ்கோ நகரில் உள்ள, 'சிலிக்கான் வேலி' பகுதி, புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மையமாக விளங்குகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவாலும் அதுபோன்றாக முடியும் என, நம்பிக்கை உள்ளது. அதற்கு, கண்டுபிடிப்புகளுக்கான சூழல் மற்றும் செயல் திட்டங்கள், மேலும் பரவலாக்கப்பட வேண்டும்.
உலகம் மாறி வருகிறது; நாம், வளர்ச்சியில் பல மடங்கு முன்னேற வேண்டும். குறைந்த நடுத்தர வருவாய் என்ற ஏணியில் இருந்து, உயர் வருவாய் பிரிவிற்கு முன்னேற வேண்டுமென்றால், கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.கண்டுபிடிப்புகள், உற்பத்தி உயர்வுக்கு இன்றியமையாதவை. ஒரு நிறுவனத்தின் தன்மை, திறன், கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான உறவு, வலிமைமிக்கது.
இந்தியாவில், புதுமையான கண்டுபிடிப்புகளை பொறுத்தவரை, நிறுவனங்களின் வளர்ச்சியில் தொடர்ந்து தேக்க நிலை காணப்படுகிறது. இதை போக்க, கண்டுபிடிப்பு சூழலை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்
முதலீடு
உலக வங்கியின், சீரான வளர்ச்சி, நிதி மற்றும் நிறுவனங்கள் பிரிவின், தலைமை பொருளாதார நிபுணர், வில்லியம் எப்.மலேனி கூறியதாவது:வளரும் நாடுகளில், தேசிய கண்டுபிடிப்பு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றவோ அல்லது புதிய பொருட்களின் போலிகளை உருவாக்கவோ செய்யப்படும் முதலீட்டை விட, பொருட்களை கண்டுபிடிக்கவோ அல்லது செயல்முறைகளிலோ மேற்கொள்ளும் முதலீடுகள், சிறிதளவே உயர்ந்துள்ளன.
ஒரு நாடு அல்லது ஒரு நிறுவனம், கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் போது, அதற்கான தொழில்நுட்பங்கள், திறமையான பொறியாளர்கள், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்து பெற வேண்டும்.அவ்வாறு செய்யாவிடில், முதலீடுகள் மீதான வருவாய் குறைவாகவே இருக்கும். துவக்கத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் செய்யும் முதலீடுகள் மீதான வருவாய், அதிகமாக இருக்கும்.
அதே சமயம், இத்தகைய ஆய்வு மற்றும் மேம்பாடு சார்ந்த, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், முதலீட்டின் மீதான வருவாய் குறையும்.
ஒரு அரசு உருவாக்கும், தேசிய கண்டுபிடிப்பு திட்டம், பாரம்பரிய அமைப்புகள் மற்றும் கொள்கைகளை விட மேம்பட்டு, சந்தையில் சாதாரண கண்டுபிடிப்புகளுக்கு ஏற்படும் தோல்விகளை தவிர்ப்பதற்கான தீர்வுகளை வழங்கும் திறனை கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|