பதிவு செய்த நாள்
21 ஏப்2018
00:39
புதுடில்லி : டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சந்தை மூலதனம், 6.60 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இதை தாண்டும்பட்சத்தில், இந்தியாவில் இத்தகைய சாதனை புரிந்த முதல் நிறுவனம் என்ற சிறப்பை, டி.சி.எஸ்., பெறும்.
டி.சி.எஸ்., கடந்த, 2017 – 18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை, நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், டி.சி.எஸ்., நிகர லாபம், முந்தைய காலாண்டை விட, 5.71 சதவீதம் உயர்ந்து, 6,904 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது, சந்தை எதிர்பார்ப்பை விட, அதிகமாக இருந்தது. அத்துடன், நிறுவனத்தின் பொன் விழாவை முன்னிட்டு, பங்கு முதலீட்டாளர்களுக்கு, ஒரு பங்கிற்கு, ஒரு பங்கு வீதம் போனஸ் வழங்குவதாக டி.சி.எஸ்., அறிவித்தது. இது தவிர, ஒரு பங்கிற்கு, 29 ரூபாய் டிவிடெண்டு அளிக்கப்படும் என, தெரிவித்தது.
இதுபோன்ற காரணங்களால், நேற்று, டி.சி.எஸ்., பங்குகளுக்கு அதிக கிராக்கி காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில், டி.சி.எஸ்., பங்கு விலை, ஓராண்டில் இல்லாத வகையில், 6.76 சதவீதம் உயர்ந்து, 3,406.40 ரூபாய் என்ற அளவில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையிலும், பங்கு விலை, 6.62 சதவீதம் அதிகரித்து, 3,402.45 ரூபாயில் நிலை கொண்டது.இதன் மூலம், டி.சி.எஸ்., பங்கின், சந்தை மூலதனம், நேற்று ஒரே நாளில், 41,301 கோடி ரூபாய் அதிகரித்து, 6,52,083 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டது. டி.சி.எஸ்., சந்தை மூலதனம், முதன் முறையாக, கடந்த, ஜன., 24ல், 6 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.
இதையடுத்து, குறுகிய காலத்தில், தற்போது, 6.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. டி.சி.எஸ்., பங்கு ஒன்றின் விலை, 3,448 ரூபாயை எட்டும் பட்சத்தில், இந்தியாவில், 10 ஆயிரம் கோடி டாலர் சந்தை மூலதனத்தை எட்டிய, முதல் நிறுவனம் என்ற சிறப்பை பெறும். அப்போது, ஒரு டாலர், 66 ரூபாய் என்ற அடிப்படையில், இதன், சந்தை மூலதனம், 6.60 லட்சம் கோடி ரூபாயாக உயரும். டி.சி.எஸ்., வரும் வாரத்தில், இந்த சாதனை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்?
இந்தியாவில், ‘ஆட்டோமேஷன், ஏ.ஐ.,’ போன்ற புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு பரவலாகி வருகிறது. இவை, பாரம்பரிய சாப்ட்வேர் சேவை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளன. அமெரிக்காவின் விசா கட்டுப்பாடும், இந்நிறுவனங்களை பாதித்துள்ளது. ஆனால், சாப்ட்வேர் சேவையில் ஈடுபட்டுள்ள, டி.சி.எஸ்., மட்டும், சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதற்கு, அதன் வர்த்தக உத்தி தான் காரணம் என, கூறப்படுகிறது. இதர ஐ.டி., நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, சாப்ட்வேர் சேவையுடன், ஏ.ஐ., போன்ற நவீன தொழில்நுட்பங்களை இணைத்து வழங்குகின்றன. ஆனால், டி.சி.எஸ்., முதன் முதலாக, அதே தொழில்நுட்பத்தில், ‘இக்னியோ’ என்ற சாப்ட்வேரை உருவாக்கி, தனியே விற்பனை செய்கிறது. இது போல, எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தக உத்திகளை முதலில் பயன்படுத்தி, நம்பர் – 1, ஐ.டி., நிறுவனமாக, டி.சி.எஸ்., திகழ்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|