பதிவு செய்த நாள்
27 மே2018
00:24
புன்செய்புளியம்பட்டி: ஒரு மாதத்துக்கு முன், கிலோ, 17 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நேந்திரன் வாழை, தற்போது, 50 ரூபாய்க்கு விற்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் வட்டாரத்தில், பெரியகள்ளிப்பட்டி, நாலுரோடு, கொத்தமங்கலம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 3,000 ஏக்கரில், வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் நேந்திரன் ரகம் சாகுபடி செய்யப்படுகிறது.இங்கு விளையும், நேந்திரன் வாழை, கேரளாவுக்கு அதிகளவில் விற்பனைக்கு செல்வதால், கேரளா மார்க்கெட்டை பொறுத்து, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.சில ஆண்டுகளாக தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருவதால், சுற்றுவட்டார விவசாயிகள், நேந்திரன் வாழை பயிரிடுவதில், அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நடப்பு ஆண்டுக்கான அறுவடை, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. துவக்கத்தில், ஓரளவு நல்ல விலை கிடைத்தது. விளைச்சல் அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், கிலோ, 17 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன், இந்த விலை திடீரென உயர துவங்கியது. தற்போது, 1 கிலோ நேந்திரன் வாழையை, 48 ரூபாய் முதல், 50 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:கர்நாடகாவில் அதிகளவில் நேந்திரன் வாழை பயிரிட்டதால், விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு காற்றுடன் மழை பெய்ததால், பல லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்தன. கர்நாடகாவில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், நேந்திரன் வாழையின் விலை உயர்ந்துள்ளது.ஒரு கிலோ, 48 ரூபாய் முதல், 50 ரூபாய் வரைக்கும் தோட்டத்திற்கு வந்து வியாபாரிகள் வெட்டிச் செல்கின்றனர். இதனால் ஒரு வாழைத்தாருக்கு, 600 ரூபாய் முதல், 700 ரூபாய் விலை கிடைக்கிறது. கேரளாவில் நேந்திரன் வாழை தேவை அதிகரித்துள்ளதால், மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|