பதிவு செய்த நாள்
16 ஜூலை2018
01:05
மருத்துவ காப்பீடு பெறுவதன் அவசியத்தை அறிந்திருப்பதோடு, அவற்றை தேர்வு செய்யும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
போதுமான ஆயுள் காப்பீடு பெறுவது போலவே, மருத்துவ காப்பீடு வசதியும் பெற்றிருப்பது மிகவும் அவசியம். நிதி திட்டமிடலில் இது முக்கிய அங்கமாக இருப்பதோடு, முதலீட்டை துவக்கும் முன் இந்த பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியம்.
மருத்துவ காப்பீடு, மருத்துவ அவசர தேவைகளின் போது கைகொடுக்க வல்லது என்பதால், ஒவ்வொருவரும் பொருத்தமான பாலிசி பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.எதிர்பாராமல் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க கூடிய அளவு பாதுகாப்பை பெற, சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இதில் மனதில் கொள்ள வேண்டிய முதல் அம்சம், பணியிடத்தில் வழங்கப்படும் மருத்துவ காப்பீடு மட்டுமே போதுமானதல்ல என்பது தான்.
நிபந்தனைகள் என்ன?
பல நிறுவனங்களில், ஊழியர்களுக்கு குழு காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு தனியே மருத்துவ காப்பீடு தேவையில்லை என கருதுகின்றனர். ஆனால், நிறுவன குழு பாதுகாப்பு போதுமானது அல்ல என்பதோடு, இடையே பணி இழப்பு அல்லது பணி மாறுதல் ஏற்பட்டால் சிக்கல் ஏற்படலாம். மேலும் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடும் தேவை.காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது, மேலோட்டமாக மட்டும் அதன் பலன்களை புரிந்து கொள்ளாமல், முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மிகச்சிறிய எழுத்துகளில் கொடுக்கப்பட்டு உள்ள நிபந்தனைகளை கவனமாக படித்துப்பார்க்க வேண்டும். எத்தகைய நோய்கள் மற்றும் சூழல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; எவற்றுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன; மருத்துவமனை அறை தொடர்பான குறிப்புகள் என்ன... போன்ற விபரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பொருத்தமான பாலிசியை தேர்வு செய்ய வேண்டும். கிளைம் செய்வதற்கான நிபந்தனைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.பாலிசியை தீர்மானிக்கும் போது பிரீமியம் தொகையை மனதில் கொள்வது இயல்பானது தான். ஆனால் பிரீமியம் தொகையை மட்டுமே அடிப்படையாக கொண்டு பாலிசியை தீர்மானிக்க கூடாது. பாலிசி பாதுகாப்பு, மருத்துவ தேவைகளுக்கு போதுமானதா? விலக்கப்பட்ட அம்சங்கள் எவை என்பதை எல்லாம் பரிசீலித்தே பாலிசியை தீர்மானிக்க வேண்டும். குறைந்த பிரீமியம் தொகைக்காக பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.எந்த பாலிசி?அதே போல பாலிசி பெறும் போது மருத்துவ வரலாறு தொடர்பான தகவல்களை மறைக்கக் கூடாது. இதனால் பின்னர் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. பாலிசியை தேர்வு செய்யும் போது, தனிநபர் பாலிசியா அல்லது குடும்பத்திற்கான புளோட்டர் பாலிசியா என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தனிநபர் பாலிசி எனும் போது, குடும்ப உறுப்பினர்களுக்கு தனித்தனியே பாலிசி பெற வேண்டும்.குடும்பத்திற்கான பாலிசியில், ஒரு நபருக்கு மேல் பாதுகாப்பு பெற முடியும். உதாரணத்திற்கு ஒரு பாலிசியில் குடும்பத்தலைவர், மனைவி மற்றும் குழந்தைக்கான பாதுகாப்பு பெறலாம். இந்த வகை பாலிசிகள், அனைவருக்குமான தனிப்பட்ட பாலிசிகளை விட குறைவான பிரீமியம் கொண்டு இருக்கின்றன. எனவே குழந்தைகள் உள்ளவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். எனினும்,குறிப்பிட்ட நபருக்கு மருத்துவ தேவை அதிகம் இருந்தால் தனி பாலிசி பொருத்தமாக அமையும்.
இந்தியர்களிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்இந்தியர்கள் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதும், பணி மற்றும் நிதி விஷயங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.சிக்னா டிடிகே ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்திய உலக நலவாழ்வு தொடர்பான ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது:இந்தியாவில், 89 சதவீதத்தினர் மன அழுத்தத்திற்கு இலக்காகின்றனர். சர்வதேச அளவில் இது, 86 சதவீதமாக இருக்கிறது. மேலும், இந்தியர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற தயங்குகின்றனர். இவர்களில் இளைய தலைமுறையினரே, அதிகம் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.பணி மற்றும் நிதி விஷயங்கள் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனினும் பணியிட அழுத்ததிற்கு இலக்கானவர்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு உதவியும் ஆதரவும் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். பணியிட நலத்திட்டங்கள், வேலை வாய்ப்பை தேர்வு செய்வதில் முக்கிய அம்சமாக விளங்குகின்றன.
உங்கள் மாதாந்திர சேமிப்பை அதிகரிப்பதற்கான எளிய வழிகள்
சேமிப்பில் இருந்து தான் முதலீடு துவங்குகிறது. எனவே, மாதந்தோறும் சேமிப்பது முக்கியம். மாத வருவாயில் குறைந்தபட்சம், ௧௦ சதவீதமாவது சேமிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதிகம் சேமிக்க முடிந்தால் நல்லது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் நிலையில் சேமிக்க முடியவில்லை என்றாலும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல, முயற்சி செய்தால் அதிகமாக சேமிக்கலாம். அதற்கான வழிகள்:
பாதி வருமான சவால்
உங்களால் பாதி வருமானத்தை வைத்து வாழ முடிந்தால் எப்படி இருக்கும்? அப்போது பாதி வருமானத்தை சேமிக்க முடியும் அல்லவா? பாதி வருமானத்தில் வாழ்வது இயலாத காரியம் என தோன்றினாலும், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முயற்சிக்கலாம். முழுவதுமாக நிறைவேற்ற முடியாமல் போனாலும் கூட, இலக்கை நெருங்கினாலும் கூட வெற்றி தான்.
தேவை திட்டமிடல்
பாதி வருமானத்தில் வாழ்வதற்கு மன உறுதியும், திட்டமிடலும் தேவை. இந்த திட்டமிடலை செலவு கணக்கில் இருந்து துவக்க வேண்டும். டயட் கட்டுப்பாட்டிற்கு தயாராவது போல, செலவு களை குறைப்பதற்கும் முறையாக தயாராக வேண்டும். இதற்கு, மாதாந்திர செலவுகளை முதலில் கண்காணிக்க வேண்டும். ஒரு மாதம் எல்லா செலவுகளையும் குறித்து வைக்க வேண்டும்.
செலவு கட்டுப்பாடு
ஒரு மாதம் செலவுகளை கண்காணித்த பின், எந்த செலவுகள் எல்லாம் அத்தியாவசியமானவை மற்றும் எவை எல்லாம் தேவை இல்லாத செலவுகள் என்று புரிந்திருக்கும். இப்போது, அத்தியாவசிய செலவுகளை மேற்கொண்டு, தேவை இல்லாத செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சேமிப்பு ஏற்பாடு
செலவுகளை கட்டுப்படுத்திய பிறகு, வருமானத்தில் மிஞ்சும் தொகையை சேமிப்பாக மாற்ற வேண்டும். மாதம் எவ்வளவு தொகையை மிச்சம் செய்ய முடியும் என்ற புரிதலின் அடிப்படையில், அந்த தொகை, தானாக வங்கி கணக்கில் இருந்து சேமிக்கப்பட வழி செய்ய வேண்டும். முதலில் சேமிப்பு கணக்கிற்கு தான் பணம் செல்ல வேண்டும்.
குடும்பத்தினர் பங்கு
பாதி வருமானத்தை சேமிக்க முயலும் போது, பல்வேறு தடைகள் ஏற்படலாம். வாழ்வியல் சார்ந்த செலவுகளை உறுதியுடன் கட்டுப்படுத்த வேண்டும். பல செலவுகளுக்கு குறைந்த செலவிலான தரமான மாற்று வழிகளை நாடலாம். குடும்ப உறுப்பினர்களையும் இதில் அங்கமாக்கி பங்கேற்க செய்ய வேண்டும்.
===============================================
கமாடிட்டி சந்தை
கச்சா எண்ணெய்
ஜூன் மாத உயர்வுக்கு பிறகு, கச்சா எண்ணெய் விலை, இம்மாத ஆரம்பம் முதல் சரிய துவங்கியது. ஈரான் நாட்டின் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்து, எண்ணெய் ஏற்றுமதியை முடக்கியது.மேலும், லிபியா, வெனிசுலா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாதத்தின் கடைசி வாரங்களில், விலை கிடு கிடு என உயர்ந்து, நான்கு ஆண்டு உச்சத்தை அடைந்தது. அதாவது, ஒரு பேரல் கச்சா எண்ணெய், 74.46 டாலர் வரை எட்டியது.ஆனால், தற்போது ஒபெக் உறுப்பு நாடான லிபியா, தன் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகம் மூலமாக, முடங்கியிருந்த ஏற்றுமதியை துவங்கியது.மேலும், அமெரிக்க நாட்டின், செக்ரட்டரி ஆப் வாஷிங்டன் பேசுகையில், ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இறக்குமதி செய்து கொள்ள அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.மேலும், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக மோதல் காரணமாக, இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு வரியை உயர்த்தி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த இரு வாரங்களாக எண்ணெய் விலை சரிந்து வருகிறது.இந்தியாவின் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் எரிபொருள் தேவை, 8.7 சதவீதம் உயர்ந்து, 17.99 மில்லியன் டன்களாக உள்ளது. இதில் பெட்ரோல் தேவை மட்டும், 14.9 சதவீதம் அதிகரித்து, 2.38 மில்லியன் டன் ஆகியுள்ளது.இவ்வாறு பெருகி வரும் தேவை மற்றும் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, மதிப்பு சரிந்து வரும் ரூபாய் போன்ற காரணங்களால், நம் நாட்டின் வணிகப் பற்றாக்குறை, ஜூன் மாதத்தில், ஐந்து ஆண்டு உச்சத்தை எட்டி, கவலை தந்துள்ளது.
வெள்ளி
சர்வதேச சந்தையில், இந்த ஆண்டு துவக்கம் முதல், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, தொடர்ந்து நான்காவது மாதமாக சரிவில் இருந்து வருகிறது.அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பும், இவ்வாண்டில் மீண்டும் இரு முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும், சந்தையில் அமெரிக்க நாணய குறியீடு மதிப்பு உயர வழிவகுத்தது. இதனால், அனைத்து கமாடிட்டி விலைகளும் சரிய ஆரம்பித்தன.மேலும், வட்டி விகித உயர்வு காரணமாக, அரசு கருவூல பத்திரங்களில் நீண்ட கால பத்திரங்களின் ஆதாயம் உயர்ந்தது.இதனால், முதலீட்டாளர்கள் தங்கம் முதலீட்டை குறைத்து, அரசு கருவூலங்களில் முதலீடு செய்ததால், தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது. ஆபரண சந்தையில், இரண்டாவது மிகப்பெரிய இறக்குமதி நாடான இந்தியாவின் தங்கம் இறக்குமதி, இந்த ஆண்டில் கடுமையாக சரிந்துள்ளதும் ஒரு காரணமாகும்.இருப்பினும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு சரிந்ததால், உள்நாட்டில் சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது, குறைவாகவே விலை சரிந்துள்ளது.கடந்த நான்கு மாதங்களில், சர்வதேச சந்தையில், 9.5 சதவீதம் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், எம்.சி.எக்ஸ்., பொருள் வணிக சந்தையில், 5 சதவீதம் அளவுக்கே சரிவு ஏற்பட்டது.தங்கத்தின் விலையை பொறுத்தவரை, ஒரு அவுன்ஸ் அதாவது, 31.104 கிராம் விலை, 1,230 டாலர் என்பது நல்ல சப்போர்ட் ஆகும். இதை கடக்கும் நிலையில் சரிவு தொடரும்.
செம்பு
செம்பு விலை, கடந்த வாரம் சரிவில் முடிவடைந்தது. அமெரிக்க நாணய குறியீடான, டாலர் இண்டெக்ஸ் உயர்வு மற்றும் வரவிருக்கும் அமெரிக்க வங்கியின் வட்டி விகிதம் குறித்த கூட்டத்தில், வட்டிவிகிதம் உயர்த்தப்படலாம் என்ற கண்ணோட்டத்திலும் செம்பு விலை சரிவை சந்தித்தது.மேலும், 2017ம் ஆண்டின் கடைசி காலாண்டில், அதாவது, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், லண்டன் மெட்டல் எக்சேஞ்ச் செம்பு விலை, 1 டன், 7,200 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது.ஆனால், இந்த விலை உயர்வு நிலைக்கவில்லை. 2018ம் ஆண்டின் முதல் காலாண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களுமே சரிவில் வர்த்தகம் ஆனது. தற்போது, லண்டன் மெட்டல் எக்சேஞ்சில், செம்பு, 1 டன், 6,832 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகிறது.
பங்குச் சந்தை
முருகேஷ் குமார்
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, கடந்த வாரம், 270 புள்ளிகள் உயர்ந்து, 11,076 புள்ளிகளை எட்டியது. கடந்த ஆறு வார காலத்தில் சீரான போக்குக்கு பிறகு, சந்தையில் பங்குகளின் விலை கடந்த வாரம் உயர்ந்தது.இருப்பினும், ரியல் எஸ்டேட், பொதுத்துறை நிறுவனங்கள், மூலதன பொருட்கள் மற்றும் சில துறை பங்குகளில் சரிவில் வர்த்தகம் நடைபெற்றது.நிப்டி இண்டெக்ஸில் உள்ள, 50 பங்குகளில், 5 பங்குகள் கடந்த வாரத்தில் வரலாற்று உச்சத்தை எட்டின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ் 30ல், ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, தொழில்நுட்ப துறை சார்ந்த பங்குகள் வருமானம் அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தில், பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.கடந்த வாரங்களில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை சரிவு, பங்கு சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தது. அமெரிக்கா -– சீனா இடையேயான வர்த்தக மோதலில், ஒரு சுமுக உடன்படிக்கை ஏற்படலாம் என்ற கருத்து நிலவியது.மேலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கொள்முதல், கடந்த புதன்கிழமை அன்று அதிகரித்தது. இதன் காரணமாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, உயர்ந்து வர்த்தகமாகியது.கடந்த புதன் அன்று, அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், 636.27 கோடி ரூபாய்க்கும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், 15.33 கோடி ரூபாய்க்கும் நேரடி கொள்முதல் செய்தது குறிப்பிடத்தக்கது.மேலும், தென்மேற்கு பருவமழை இதுவரை சராசரிக்கு மேல் பெய்ததாலும், வரும் காலாண்டில் நிறுவனங்களின் ஆதாயம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் சந்தை வலுப்பெற்றது.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி, முதல் ரெசிஸ்டென்ட், 11,170 மற்றும், 11,300 ஆகும். சப்போர்ட், 10,905 ஆகும்.
அதிகரித்து வரும் அச்ச உணர்வு
சந்தையின் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, தொடர்ந்து உச்சம் தொடும் இந்த வேளையில், சந்தையில் உற்சாகம் அதிகம் தென்படவில்லை. மாறாக, பெருவாரியான முதலீட்டாளர்களின் முதலீடுகள், தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் சூழலே நிலவுகிறது.சந்தை உச்சத்தை தொட்டால் ஏற்படும் உற்சாகமோ, குதுாகலமோ துளியும் இல்லை. சந்தை குறியீடுகள் உயர்ந்தும், தங்கள் கையிருப்பில் உள்ள முதலீடுகள் சரிவர வர்த்தகமாகாத நிலைமை தான் பலருக்கும்.அவற்றில் பல தொடர் வீழ்ச்சியை காணும் இந்த நேரத்தில், கவலைக் குறிகள் மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்து உள்ளன. முதலீட்டாளர்களின் மனதில் சோர்வும், கவலையும் மட்டுமே ஓங்கி நிற்கிறது.இந்த ஆண்டு செய்யப்பட்ட முதலீடுகள் எதுவும், அடக்க விலையைவிட அதிகமாக இல்லை என்ற நிலைமையை, பல முதலீட்டாளர்கள் இப்போது எதிர்கொள்கின்றனர்.இனி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதறியாது பலரும் ஒருவித தவிப்பில் இருப்பது தெரிகிறது. பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தவர்கள், முதலீடுகள் விரைவில் மீண்டு எழும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.நாளடைவில் இந்த நம்பிக்கை எப்படி மாறும் என்பதை சந்தை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது.எஸ்.ஐ.பி., சார்ந்த பணவரத்து குறையும் சூழ்நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் குறைந்து வருகிறது. சந்தைக்கு வரும் ரொக்க பணவரத்தும் குறையத் துவங்கி உள்ளது. இனி தொடர்ந்து பணவரத்து குறையும் சூழலே தெரிகிறது.இந்த சூழ்நிலையில், உயரும் பணவீக்கம், கச்சா விலை, ஏறும் டாலர் மதிப்பு ஆகியவை, சந்தையின் அச்ச உணர்வை மேலும் அதிகரிக்கும் வண்ணம் அமைந்து வருகின்றன.ஆனால், அச்ச உணர்வுகள் வெளிப்படையாக, முழுவதுமாக தெரியாவிட்டாலும், சந்தையை நன்கு அறிந்த வட்டாரங்கள் கவலைப்பட துவங்கிவிட்டன. இதே நிலைமை தொடர்ந்தாலே, சந்தையில் பெரும்தாக்கம் ஏற்படும் என்ற கள நிலைமை அவர்களை பாதிக்கிறது.ஆனாலும், உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க எவரும் தயாராக இல்லை. எப்படியாவது சரிந்த பங்குகள் மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையில் பெருவாரியான வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் காத்திருக்கின்றனர்.இந்த சூழலில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கணக்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 15 வரை இந்த அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கும்.நிறுவனங்கள், சந்தையின் எதிர்பார்ப்பை விஞ்சும் வகையில் வளர்ச்சி கண்டால் மட்டுமே, அவை விலை சரிவை தவிர்க்க முடியும். மாறாக, சந்தையின் எதிர்பார்ப்பைவிட குறைந்த வளர்ச்சி அமைந்தால், அந்த நிறுவன பங்குகள், விலை சரிவை சந்திக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.ஆகவே, நிலவும் சூழலில், அச்சமும் படபடப்பும் இருப்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். இனி வரும் வாரங்களில் ஏற்படும் பணவரத்து மாற்றங்கள், லாப வளர்ச்சி மற்றும் பொருளாதார குறியீடுகள், சந்தையின் வருங்கால வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.சந்தையில் தென்படும் முதலீட்டு தயக்கம், இதை உணர்ந்ததன் வெளிப்பாடே ஆகும்.வரும் வாரங்கள், இந்த நிதியாண்டின் சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் வகையில் அமையும். வளரும் சூழல் சார்ந்து முதலீட்டு தேர்வுகள் அமையாததே, சந்தையில் முதலீட்டாளர்களின் சங்கடங்களுக்கு முக்கிய காரணம்.வருங்கால சூழலுக்கு ஏற்ப, முதலீடுகளை அமைத்துக் கொள்ள, முதலீட்டாளர்கள் இப்போதாவது முயற்சிக்க வேண்டும். சந்தை சந்திக்கப் போகும் சவால்களை மனதில் கொண்டு, முதலீட்டு வேகத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.இதை காலத்தோடு செய்தால் மட்டுமே, மேலும் நஷ்டம் அடைவதை தவிர்க்க முடியும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
நிதி பற்றாக்குறையில் மாநிலங்கள்!
இந்திய பொருளாதாரம், பிரான்சை முந்தி, சர்வதேச அளவில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது தேன்செய்தி. அதேசமயம், இந்தியாவுக்குள் இருக்கும் பல்வேறு மாநிலங்களின் நிதி பற்றாக்குறை அளவு, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டும் உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. இதற்கு என்ன காரணம்?மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநிலங்களின் நிதி நிலைமை பற்றிய அறிக்கை அது. அதில், மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை, 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக, மத்திய, மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை, 3 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்பது லட்சுமண ரேகை. அதை மீறிப் போனால், நிதி நிர்வாகத்தில் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.சென்ற ஆண்டு, பல்வேறு மாநிலங்கள் வழங்கிய பட்ஜெட்டுகளில் தங்களது நிதிப் பற்றாக்குறை, 2.7 சதவீதம் தான் இருக்கும் என்று கணித்திருந்தன. ஆனால், 2017 --– 18 செலவினங்களைப் பார்க்கும்போது, இந்தக் கணிப்பு பொய்த்துப் போய்விட்டது.இந்தக் கணக்கில் ஒரு சின்ன அல்ப திருப்தி இருப்பதை மறுப்பதற்கில்லை. உதய் திட்டத்தில், தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இணைந்துள்ளதால், மின் பகிர்மானக் கழகத்தின் கடன் தொகை, மாநில செலவினங்களில் சேராது.அப்படிப் பார்க்கும்போது, மாநிலங்களில் உண்மையான நிதிப் பற்றாக்குறை, 3.1 சதவீதம் அல்ல; அது, 2.7 சதவீதம் தான் என்று கொஞ்சம் தெம்பாகச் சொல்லலாம்.ஆனால், ஆர்.பி.ஐ., உதய் திட்ட கடனையும் கணக்கில் எடுத்துக்கொண்டே கணக்கிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏன் இந்த மீறல்?அதனால் தான், 3.1 சதவீத நிதிப் பற்றாக்குறை முன்வைக்கப்படுகிறது. 3 சதவீதத்துக்குள் ஏன் மாநிலங்கள் தங்கள் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை?சென்ற ஆண்டு தான், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசில் இருந்து, மாநில அரசுகளுக்கு வந்து சேரவேண்டிய உரிய தொகை நிலுவையில் இருப்பதால், வரவுகளை முழுமையாக காண்பிக்க முடியவில்லை.மேலும், மாநில அரசுகளுக்கு இழப்புகள் ஏதேனும் இருக்குமானால், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு அதை ஈடு செய்யும் என்று ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், திரட்டப்படும், ஜி.எஸ்.டி., வருவாயில் உரிய பங்கு வருவது உறுதி. ஆனால், அது எப்போது வரும் என்பதுதான் சிக்கல்.இன்னொரு முக்கியமான காரணம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உட்பட பல மாநிலங்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட முடிவெடுத்துள்ளன. இதனால், மாநில நிதி நிலைமை திணறுகின்றன.மூன்றாவது காரணம், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, பல மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. இதனாலும், அவர்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றன.பல மாநிலங்களில் போதிய வரி வருவாய் இல்லை. செலவினங்களோ அதிகம் எனும்போது, நிதிப் பற்றாக்குறை ஏற்படவே செய்யும்.பாதிப்புகள் என்ன?நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது, பல மாநில அரசுகள் கடன் பத்திரங்களை வெளியிடும். வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர சகாய நிதி நிறுவனங்களும், அரசுத் துறை கடன் பத்திரங்களை வாங்கவே முன்னுரிமை கொடுக்கும்.இதனால், தனியார் பெருநிறுவனங்கள் கடன் பெறுவதற்கு கூடுதல் வட்டி கொடுக்க வேண்டி இருக்கும். அதைக் கொண்டே அவை தம் தொழிலகங்களை மேம்படுத்துகின்றன என்பதால், அங்கே பெரிய இடர் ஏற்படும். தேக்கம் ஏற்படும். வளர்ச்சியில் தொய்வு ஏற்படும்.செலவுகளைக் கட்டுப்படுத்தி, திறமையான நிதி நிர்வாகத்தைக் காண்பித்தால் தான், பல தனியார் முதலீட்டாளர்கள் மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை வாங்க முன்வருவர். இன்றைக்கு இருக்கும் நிலையில் பல மாநில அரசுகளுக்கு, எங்கே தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்த வேண்டும் என்றே தெரியவில்லை. கடைசியில் அவை கை வைப்பது, வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியிலே தான்.பல மாநிலங்களில் செய்யப்பட வேண்டி வளர்ச்சிப் பணிகள் இதனால் சுணங்கிப் போவது நிச்சயம்.இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் ஈட்டித்தருவது மது விற்பனையும், மனை விற்பனையும், பெட்ரோல் டீசல் வரிகளும் தான். மாநில நிதிப் பற்றாக்குறைகள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை எனும்போது, பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர, நிச்சயம் மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.அதேபோல், மது வகைகள்மீது விதிக்கப்படும் வரிகள் மேன்மேலும் உயரவே போகின்றன. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான வாய்ப்புகள், கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தெரியவில்லை என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.அடுத்த இரு இடிகள்அடுத்த ஓராண்டுக்குள் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரப் போகின்றன. லோக்சபா தேர்தலும் வரப் போகிறது. இந்நிலையில், பல மாநிலங்கள் ஏராளமான சலுகைகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி, ஓட்டுகளை அறுவடை செய்யவே விரும்பும்.இதன் விளைவாக, மாநில நிதி நிலைமைகள் தள்ளாட்டம் காணப் போவது உறுதி. ஆர்.பி.ஐ., அறிக்கை இந்தக் கவலையை அடிக்கோடிட்டே காண்பித்திருக்கிறது.இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. 2008 பொருளாதாரத் தேக்கத்தின்போது பல மாநில அரசுகள், 10 ஆண்டு கடன் பத்திரங்களை வெளியிட்டன. இந்த ஆண்டின் முடிவில் அவை முதிர்வு பெறப் போகின்றன. பணத்தைத் திருப்பித் தரவேண்டும். அது, மாநில அரசின்நிதி நிலைமை மீது கடும் அழுத்தத்தை ஏற்றப் போவது உறுதி.தீர்வு என்ன?செம்மையான நிதி நிர்வாகம்ஒன்று தான் ஒரே வழி. வரவுகளை உயர்த்த எந்த வழியும் இல்லை. செலவுகளை பல மடங்கு கட்டுப்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன.இடுப்புப் பட்டியை இறுக்கக்கட்டி செயல்பட்டால், மாநிலங்கள் பிழைக்க முடியும். தேர்தல் லாபத்தை மனத்தில் கொண்டு, செலவுகளை கன்னாபின்னாவென்று செய்தால், ஆட்சியாளர்கள் வேண்டுமானால் மீண்டும் அரசுக் கட்டிலில் ஏறலாம். ஆனால், மக்கள் ஓட்டாண்டிகளாவது நிச்சயம்.இதை எந்த மாநில மக்களும் விரும்பமாட்டார்கள் என்பதை,ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|