பதிவு செய்த நாள்
27 ஜூலை2018
23:34
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில், மிகப்பெரிய அரசுத் துறை நிறுவனங்களில் ஒன்றான, அரசு ரப்பர் கழகத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், 2016 நவம்பரில் நிறைவடைந்தது. இதையடுத்து, மூன்றாண்டுகளுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தும் வகையில், தொழிற்சங்கங்கள், ரப்பர் கழக நிர்வாகத்தை தொடர்ந்து வலிறுத்தி வந்தன. பல பேச்சில் முடிவு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்தனர். இப்போராட்டங்களின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள், 4ம் தேதி முதல் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நாகர்கோவிலில் தொழிலாளர் துறை துணை கமிஷனர் அலுவலகத்தில், 34வது முறையாக நேற்று பேச்சு நடந்தது. இதில், தொழிலாளர் துறை துணை கமிஷனர் சுடலைராஜ், ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் வேணு பிரசாத் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், ரப்பர் கழகத்தில் பணிபுரியும், பால்வடிப்பு தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், களப்பணி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு, இடைக்கால ஊதிய உயர்வாக நாள் ஒன்றிற்கு, 23 ரூபாய் உயர்த்தி வழங்க ரப்பர் கழகம் ஒப்பு கொண்டது.
இந்த ஊதிய தொகையுடன், அகவிலைப்படியும் கூடுதலாகக் கிடைக்கும். இதையடுத்து, புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழிலாளர்கள் நடத்தி வந்த ஒத்துழையாமை போராட்டம், இன்று முதல் விலக்கி கொள்ளப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|