பதிவு செய்த நாள்
22 அக்2018
23:20
புதுடில்லி : குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சுலபமாக கடன் பெற வசதியாக, நில ஆவணங்களை, ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த, 1991ல், அன்னிய கடன் அதிகரிப்பால், நாடு, நடப்பு கணக்கு பற்றாக்குறை பிரச்னையை சந்தித்தது. இதையடுத்து, மத்திய அரசு, புதிய தொழில் கொள்கையை வெளியிட்டது.அதன்பின், 26 ஆண்டுகள் கழித்து, 2017, ஆக.,ல், மத்திய அரசு, புதிய தொழில் கொள்கை வரைவறிக்கையை வெளியிட்டது.
அது தொடர்பான கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, புதிய தொழில் கொள்கை, விரைவில் வெளியிடப்படும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
இது குறித்து, அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த, 20 ஆண்டுகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அன்னிய தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ளவும், புதிய தொழில் கொள்கை வழி வகுக்கும்.மேலும், ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி டாலர் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வளரும் துறைகளை மேம்படுத்தவும், தற்போதுள்ள தொழில்களை நவீனமயமாக்கவும், தொழில் கொள்கை உதவும்.
சுலபமாக தொழில் துவங்க தடையாக உள்ள, அம்சங்களை குறைக்க துணை புரியும்.அத்துடன், தொழில் நிறுவனங்கள், ‘ரோபோட்டிக்ஸ், பிளாக்செயின், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ போன்ற, முன்னணி தொழில்நுட்பங்களை பின்பற்றுவதை ஊக்குவிக்கும்.
தற்போது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், நிர்ணயித்த அளவிற்கு மேல் கடன் பெறுவதற்கு, நில ஆவணங்களை பிணையாக அளிக்கின்றன. இந்த ஆவணங்களை, பரிசீலித்து, தகுதியானவற்றை தேர்வு செய்வதில் ஏகப்பட்ட சிரமங்கள் உள்ளன. அதனால், நில ஆவணங்களை, ‘பிளாக்செயின்’ எனப்படும், மின்னணு தொழில்நுட்பத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் அம்சங்கள், புதிய தொழிற் கொள்கையில் இடம் பெறும் என, எதிர்பார்க்கலாம்.
ஒருங்கிணைப்பு :
தற்போது, பல மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளில், நில ஆவணங்கள், மின்னணு ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.அவை, பல்வேறு தளங்களின் கீழ் பதிவு செய்யப்படுவதால், ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இல்லை.அதனால், நாடு முழுவதும், பொதுவான, 'பிளாக்செயின்' மின்னணு தொழில்நுட்பத்தில், நில ஆவணங்களை பதிய, புதிய தொழில் கொள்கை பரிந்துரைக்கும்.
இதன் மூலம், நில ஆவணங்களின் பரிசீலனை காலம் வெகுவாக குறையும். ஒரு மாநிலத்தில் உள்ள நிறுவனம், வேறு மாநிலத்தில் உள்ள நில ஆவணங்களை பிணையாக அளிக்கும்போது, அவற்றின் நம்பகத்தன்மையை, கடன் வழங்கும் வங்கிகள் சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.இதனால், விரைவாக கடன் வழங்கும் சூழல் உருவாகும். இது, தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும்.இது தவிர, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதை சுலபமாக்க, மேலும் பல அம்சங்கள், புதிய தொழில் கொள்கையில் இடம் பெறும் என, தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
எப்படி செயல்படுகிறது?
வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட மெய்நிகர் கரன்சிகளின் பரிவர்த்தனைகளுக்கு, ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதில், பரிவர்த்தனைகள் அனைத்தும், மைய, ‘சர்வர்’ இன்றி, ஒட்டுமொத்த கணினி ஒருங்கிணைப்புகளுக்கு இடையேதான் நடைபெறுகின்றன.அதனால், இந்த தொழில்நுட்பம், பரஸ்பர பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|