பதிவு செய்த நாள்
10 நவ2018
23:41
புதுடில்லி:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், தங்களிடம் உள்ள கோரப்படாத தொகையை, சம்பந்தப்பட்ட காப்பீட்டுதாரர்களுக்கோ அல்லது அவர்களின் வாரிசுகளுக்கோ வழங்குமாறு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், கோரப்படாத காப்பீட்டு தொகை குறித்த விபரங்களை, ஆண்டுக்கு இரு முறை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்குகின்றன. அதன்படி, இந்தாண்டு, மார்ச், 31 வரை, 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம், 15,166 கோடி ரூபாய், காப்பீட்டுதாரர்களால், கோரப்படாமல் உள்ளது. இதில், பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி.,யிடம் மட்டும், 10,509 கோடி ரூபாய் உள்ளது.
தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம், 4,657 கோடி ரூபாய் தேங்கியுள்ளது. இத் தொகையை, காப்பீட்டுதாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளை தேடிக் கண்டுபிடித்து, வழங்குமாறு, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.புதிய வசதிமேலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வலைதளத்தில், ‘தேடுதல்’ என்ற பிரிவை சேர்க்குமாறும் தெரிவித்து உள்ளது.
இப்பிரிவில், ஆயுள் காப்பீட்டுதாரர்களின், ‘ஆதார், பான்’ போன்ற விபரங்களை தெரிவித்து, அந்த கணக்கில் உள்ள கோரப்படாத தொகையை, அவர்களோ அல்லது வாரிசுதாரர்களோ, அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த, உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில், காப்பீட்டு தொகை கோரப்படாமல் உள்ளது.
இதற்கு, காப்பீட்டுதாரர் மறைவு, காணாமல் போவது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஓய்வூதிய திட்டங்களில், ஒருசிலரின் கணக்கில் உள்ள தொகை, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து, மாதாந்திர ஓய்வூதியம் வாங்கும் அளவிற்கு, போதாத அளவிற்கும் இருக்கலாம். இந்த வகையில், கோரப்படாத தொகையை திரும்ப அளிக்க எடுத்துள்ள நடவடிக்கை, வரவேற்கத்தக்கது. இதனால், காப்பீட்டுதாரர்களின் வாரிசுகள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|