பதிவு செய்த நாள்
24 டிச2018
02:34
ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி குறித்த சமீபத்திய கூட்டத்தில், 23 பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதில், 28 சதவீத வரி அடுக்கில் இருந்த ஏழு பொருட்கள், 18 சதவீதத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் போதுமானவையா?ஜி.எஸ்.டி.,யில் அதிகபட்சம், 28 சதவீதம். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, முந்தைய, ஜி.எஸ்.டி., கூட்டங்களில், பல பொருட்கள், 28 சதவீத அடுக்கில் இருந்து குறைக்கப்பட்டன.சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘99 சதவீதப் பொருட்கள், 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்படும்’ என, தெரிவித்தார்.இதையொட்டி, 28 சதவீத அடுக்கில் இருந்த, 35 பொருட்கள் மற்றும் சேவைகளில், ஏழுக்கு மட்டும் தற்போது வரி குறைப்பு கிடைத்துள்ளது. இதில், சினிமா டிக்கெட் மீது விதிக்கப்பட்ட, வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.வரி குறைப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, சிமென்ட். ஆனால், அதிகளவு வரி வருவாயை உருவாக்கித் தரும் சிமென்டின் மீதான வரியை மாற்றியமைக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்யவில்லை. வாகன டயர்கள் மீதான உச்சபட்ச வரியும் குறையவில்லை. வழக்கம் போல், ‘பாவப்பட்ட பொருட்களான’ புகையிலை, ஆடம்பர கார்கள் மீதான வரிகளும் குறைக்கப்படவில்லை.இத்தகைய மேலோட்ட மான வரி விதிப்பு மாற்றங் களை தான் பிரதமர் விரும்பியிருப்பாரா என்பது தெரியவில்லை. அவரது பேச்சும், அதைத் தொடர்ந்து நடந்த வாதப் பிரதிவாதங்களும், பெரிய அளவில் வரி விதிப்பு மாற்றங்கள் இருக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால், யானைப் பசிக்குச் சோளப் பொரி போன்றே, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் முடிவு இருக்கிறது.மாற்றங்கள்முதலில், நான்கு அடுக்கு, ஜி.எஸ்.டி., என்பதே வேண்டியதில்லை. உலகில், இத்தாலி, லக்சம்பர்க், பாகிஸ்தான், கானா ஆகிய நாடுகளில் மட்டும் தான் நான்கு அடுக்கு, ஜி.எஸ்.டி., விதிப்பு முறைகள் உள்ளன. மேலும், 115 நாடுகளில் உள்ள வரிவிதிப்புகளோடு ஒப்பிடும்போது, 28 சதவீத உச்சபட்ச வரி என்பது, மிக அதிகமான வரி என்று தெரிவிக்கிறது உலக வங்கி.நான்கு அடுக்கு வரியை, இரண்டு அடுக்குகளாக மாற்ற வேண்டியது அவசியம். காங்கிரஸ் கோரியதும், 18 சதவீத வரி தான். தற்போது மோடியும், 18 சதவீத வரியையே வலியுறுத்துகிறார். உண்மையில், 12 சதவீத வரி அடுக்கை எடுத்துவிட்டு, அதையும், 18 சதவீத அடுக்கோடு இணைக்க வேண்டும்.நாளடைவில், வரிவசூல் நிலைபெறும்போது, இந்த வரியை, 16 சதவீதமாக குறைக்கலாம். அது, அரசுக்கும் வருமான இழப்பை ஏற்படுத்தாது; மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதற்கு, ‘ரெவின்யூ நியூட்ரல்’ வரி விதிப்பு என்று பெயர். அப்போது, 5 சதவீதம் மற்றும் 16 சதவீத வரி அடுக்குகள் மட்டுமே நிலைபெற்று இருக்கும்.20 லட்சம் ரூபாய்தற்போது ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் பற்றுவரவு இருக்கும் நிறுவனங் கள், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். இன்றைக்கு இருக்கும் வர்த்தக நிலையில், 10 சதவீத லாபம் பார்ப்பதே, இயலாத ஒன்றாக இருக்கிறது. ஆண்டொன்றுக்கு, 2 லட்சம் ரூபாய் லாபம் என்பது ஒன்றுமே இல்லை.ஜி.எஸ்.டி.,க்கு முன், ஆண்டொன்றுக்கு, 1.5 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் செய்தவர்கள் தான், மத்திய கலால் வரி கட்டிக்கொண்டு இருந்தனர். இன்றைக்கு, 20 லட்சம் ரூபாய் வியாபாரம் செய்பவர்களே வரி செலுத்தவேண்டும் என்னும் போது, அவர்கள் தவித்துப் போய்விடுகின்றனர்.வரி செலுத்துவதற்கான குறைந்தபட்ச அளவை, 80 லட்சம் ரூபாய் வரை உயர்த்துவது பொருத்தமாக இருக்கும். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இன்றைக்கு, ஜி.எஸ்.டி., செலுத்துவதற்கு பதிவு செய்து கொண்ட, 1.24 கோடி நிறுவனங்களில், வரி செலுத்துவது, 75 லட்சம் நிறுவனங்கள் தான். அதாவது பதிவு செய்துவிட்டனரே தவிர, வரிசெலுத்தும் அளவுக்குக் கூட அவர்களது வணிகம் இல்லை என்பது தான் யதார்த்தம்.இரண்டாவது, பல இடங்களில், வரி ஏய்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதை அடைப்பதற்கான முயற்சி இன்னொரு பெரிய தலைவலி.தேவைப்படும் மூன்றாவது முக்கிய மாற்றம், வரி செலுத்துவதற்கு உள்ள படிவங்கள். பெரிய நிறுவனங்களுக்கு பிரச்னையில்லை; சிறு வணிகர்கள் திணறுகின்றனர். பாதி நேரம், ஆடிட்டர் அலுவலகத்திலேயே காலம் கழிப்பதாக புலம்புகின்றனர். இத்தனை படிவங்கள், சமர்ப்பிப்புகள் தேவையா என்பதை அரசு யோசிக்க வேண்டும்.ஏற்கனவே, ஜி.எஸ்.டி., வலைதளத்தில் ஏராள மானோர், ‘ரிட்டர்ன்’ பதிவு செய்யப் போனபோது, அது செயலிழந்து போனது. அந்த மாதிரியான சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.ஜி.எஸ்.டி., செலுத்து வோர் சந்திக்கும் மிகப்பெரும் கஷ்டம், அபராதம். உரிய தேதிக்குள் ரிட்டர்னை சமர்ப்பிக்கவில்லை என்றால், தள்ளிப் போகும் ஒவ்வொரு நாளுக்கும் தாமதக் கட்டணமாக, 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். தாமதக் கட்டணத்துக்கு, 18 சதவீத வட்டியும் உண்டு.அடுத்த கட்டம்வரியே செலுத்தத் தேவை இல்லை என்னும், ‘நில் ரிட்டர்ன்’ பைல் செய்வதில் தாமதம் ஏற்பட்டாலும், தாமதக் கட்டணமாக, ஒவ்வொரு நாளும், 20 ரூபாய் செலுத்த வேண்டும். இதெல்லாம், வணிகர்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.பலருக்கு இன்னும் உள்ளீட்டு வரி கிடைக்க வில்லை என்ற குறை இருக்கிறது. அதனால், வொர்க்கிங் கேப்பிடலைத் திரட்ட முடியவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது.வணிகர்கள் ஏதோ பெரும் லாபம் சம்பாதித்து விடுகின்றனர்; வரி செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர் என்ற எண்ணம் உதவாது. அவர்களைக் கசக்கிப் பிழிவதன் மூலமோ, நெருக்கடி கொடுப்பதன் மூலமோ, பெரிய பலன்கள் ஏற்படப் போவது இல்லை. மாறாக, ஜி.எஸ்.டி.,யை இன்னும் எளிமைப்படுத்துவது ஒன்றே இதற்குத் தீர்வு. எங்கெல்லாம் இடர்கள், சிரமங்கள் இருக்கின்றன என்பதை பார்த்துப் பார்த்துக் களைவதன் மூலமே, ஜி.எஸ்.டி.,யை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும்.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|