பதிவு செய்த நாள்
29 ஜன2019
23:23
புதுடில்லி : ‘தங்கம், கள்ளச் சந்தையில் விற்கப்படுவதை கட்டுப்படுத்த, அதன் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, தேசிய நவரத்தினம் மற்றும் ஆபரணத் துறையின் உள்நாட்டு கூட்டமைப்பான, ஜி.ஜே.சி., வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பின் தலைவர், அனந்த பத்மனாபன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எழுதியுள்ள கடிதம்:நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2017, ஜூன் நிலவரப்படி, எதிர்பார்த்ததை விட, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 1,296 கோடி டாலராக குறைந்தது.
அதேசமயம், இறக்குமதி வரி உயர்வால், கள்ளச் சந்தையில் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது. ஆகவே, பிப்., 1ல், மத்திய அரசு வெளியிடும் இடைக்கால பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரியை, 4 சதவீதமாக குறைக்க வேண்டும். இதனால், கள்ளச் சந்தை விற்பனை கட்டுக்குள் வரும். மத்திய அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும்.
தற்போது, 2 லட்சம் ரூபாய்க்கு மேல், தங்க ஆபரணங்கள் வாங்குவோர், வருமான வரி துறையின், ‘பான்’ எனப்படும் நிரந்தர கணக்கு எண் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில், 50 சதவீதம் பேரிடம் கூட பான் அட்டை இல்லை என்பதால், கிராமப்புற மக்கள், தங்க ஆபரணங்கள் வாங்குவதில் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பான் அட்டை இருந்தும், அதை, ஆபரணங்களுக்காக பயன்படுத்த பலர் தயங்குகின்றனர். அதனால், பான் எண் தெரிவித்து, தங்கம் வாங்குவதற்கு நிர்ணயித்துள்ள வரம்பை, 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வைரம்:
மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி வளர்ச்சி குழு தலைவர், பிரமோத் குமார் கூறியதாவது:நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு தற்போது, 7.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை, 2.5 சதவீதமாக குறைக்க வேண்டும். அன்னிய சுரங்க நிறுவனங்கள், சிறப்பு மண்டலங்கள் மூலம், கச்சா வைரங்களை விற்பனை செய்ய வசதியாக, வருமான வரித் துறை ஒழுங்குமுறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
வைரங்களை பட்டை தீட்டுதல், தரம் பிரித்தல், சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு, 0.25 சதவீத ஜி.எஸ்.டி., மூலம், அச்சேவைகளுக்கும் உள்ளீட்டு வரிப் பயன் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதன தேவைகளுக்கு உதவும் வகையில், வங்கி கடன் வரம்பை தளர்த்த வேண்டும். மேலும், இத்துறை, ஏற்றுமதிக்காக பெறும் கடனுக்கு, 5 சதவீத வட்டி மானியம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு வரம்பு, 2.50 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரித்து, தங்க ஆபரணங்களில் முதலீடு செய்ய துாண்டும். அத்துடன், பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் உதவும்.
-டி.எஸ்.கல்யாணராமன், தலைவர், கல்யாண் ஜுவல்லர்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|