பதிவு செய்த நாள்
10 பிப்2019
23:49
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகை முழு பலனைப்பெற, அதற்கேற்ற வகையில் வரி திட்டமிடல் செய்ய வேண்டும்.
பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், மத்திய இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தைச்சேர்ந்தவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான வருமான வரிச்சலுகை விஷயத்தில், பட்ஜெட் ஏமாற்றம் அளிக்காமல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை ஈட்டுபவர்கள், வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் வராது என, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போல, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. மாறாக, ‘டேக்ஸ் ரிபேட்’ எனும் சலுகை வாயிலாக இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
எப்படி செயல்படுகிறது?வழக்கமாக, ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டாம். கூடுதலாக வருமானம் பெறுபவர்கள், தங்கள் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, 2.5 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக ஆண்டு வருமானம் இருந்தால், வருமான வரி வரம்பு பொருந்தும். ஆனால், ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால், டேக்ஸ் ரிபேட் எனப்படும் வரி தள்ளுபடி வாயிலாக வரிச்சலுகையை பெற வழி செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி சலுகையில், வரி விலக்கு (டாக்ஸ் எக்சம்ஷன்), வரி கழிவு (டாக்ஸ் டிடக்ஷன்) மற்றும் வரி தள்ளுபடி (டாக்ஸ் ரிபேட்) ஆகிய மூன்று அம்சங்கள் இருக்கின்றன. வரி விலக்கு என்பது அடிப்படையான விலக்கு. இந்த வரம்பிற்கு கீழ் இருந்தால் வரி செலுத்த வேண்டாம். வரி கழிவு என்பது குறிப்பிட்ட செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கு கோரப்படும் கழிவுகளாகும்.
வருமான வரி வரம்பிற்குள் இருந்தாலும், குறிப்பிட்ட தொகைக்கு கீழ் இருந்தால், டாக்ஸ் ரீபேட் எனப்படும் வரி தள்ளுபடியை கோரலாம். வருமான வரி சட்டம், 87 ஏ பிரிவின் கீழ், இந்த சலுகை வழங்கப்படுகிறது.இந்த பிரிவின் கீழ், இதுவரை, 3.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 2,500 ரூபாய் வரி தள்ளுபடி பெறலாம் என இருந்தது. இது தற்போது, 12,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் படி, ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம். ஆனால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தே இதை பெற முடியும்.திட்டமிடல் தேவைவரி சேமிப்பு செய்திருந்தால், 6.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களும் இந்த சலுகையை பெற வாய்ப்புள்ளது. ஆனால், இந்த தொகைக்கு, ௧ ரூபாய் அதிகமானாலும் வரி சலுகை பொருந்தாது.
எனவே, இந்த சலுகை பெற வரி திட்டமிலை மேற்கொள்வது மிகவும் முக்கியமாகிறது. பொருந்தக்கூடிய கழிவுகள் மற்றும் சலுகைகளை பயன்படுத்திக்கொண்டு, வருமானத்தை இந்த வரம்பிற்குள் கொண்டு வரலாம். அதே போல, ‘80 சி’ பிரிவின் கீழ் வரி சேமிப்பு முதலீடுகளை மேற்கொண்டு சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றை செய்தும், வருமானம் வரம்பிற்கு அதிகமாக இருந்தால், தேசிய பென்ஷன் திட்டமான என்பி.எஸ்., முதலீட்டிற்கு அளிக்கப்படும் கூடுதல், 50 ஆயிரம் ரூபாய் சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மருத்துவ காப்பீடு போன்றவற்றுக்கான சலுகையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சரியான வரி சேமிப்பு திட்டமிடல் வாயிலாக, வருமான வரிச்சலுகையை முழுவதுமாக பெறுவது சாத்தியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|