பதிவு செய்த நாள்
01 மார்2019
07:19
புதுடில்லி : ‘இந்தியா, ஏற்றுமதியை அதிகரித்தால், வேலைவாய்ப்பு பெருகுவதோடு, ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும்’ என, உலக வங்கி தெரிவித்துள்ளது.
தெற்காசிய வர்த்தகத்தில், ஏற்றுமதி முதல், வேலைவாய்ப்பு வரை கிடைக்கும் பயன்கள் குறித்த ஆய்வறிக்கையை, உலக வங்கியும், சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:தெற்காசிய நாடுகள், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். ஏற்றுமதி உயர்ந்தால், உள்நாட்டில் வேலைவாய்ப்பு உயரும். ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும் என்பதால், ஒட்டுமொத்த நாடும் பயன்பெறும்.
அதேசமயம், மக்கள், புதிய வேலைவாய்ப்புகளை நாடி பயன்பெறுவதை தடுக்கும் காரணிகளையும் கண்டறிந்து, அவற்றை களைவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.வறுமைகடந்த, 2017ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது. அதேசமயம், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துஉள்ளது.
எனினும், இந்தியாவில், பெரும்பாலானோருக்கு, அமைப்பு சார்ந்த துறைகளில் தொடர்ந்து வேலை கிடைப்பதில்லை. அதுபோல, ஊதிய விகிதமும், பிராந்திய அளவில் ஒரே சீராக இல்லை. தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்காத சூழலும் நிலவுகிறது.பெருகி வரும் மக்கள் தொகை பிரச்னையும் ஒரு காரணம். இத்துடன், 2012-– 17 வரை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வர்த்தகத்தின் பங்கு, 58.8 சதவீதத்தில் இருந்து, 41.1 சதவீதமாக குறைந்து உள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியில், ரசாயனங்கள், உலோக வடிவமைப்புகள் போன்ற, மூலதனப் பொருட்கள் சார்ந்தவை தான், பிரதானமாக உள்ளன. அதனால், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நேரடி பயன்களும் குறைவாகவே உள்ளன.அதனால், இந்தியா உரிய கொள்கைகளை வகுத்து, ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம், வர்த்தகத்தை பெருக்கலாம். இதனால், தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகமும் பயன்பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|