பதிவு செய்த நாள்
06 மார்2019
23:44
புதுடில்லி:சிமென்ட் உற்பத்தி செலவு குறைந்துள்ள நிலையிலும், பல நிறுவனங்கள், விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதனால், 50 கிலோ சிமென்ட் மூட்டை விலை, அதிகபட்சமாக, 77 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இது குறித்து, ‘கிரிசில்’ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2017, ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானது. அது முதல், சிமென்ட் விலை அதிகரிக்காமல், சில சமயம் குறைந்தும் காணப்பட்டது. நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், ஏப்ரல் – ஜனவரி வரை, சிமென்ட் தேவை, 12.5 – 13 சதவீதம் அதிகரித்திருந்தது. இக்கால கட்டத்தில் கூட, சிமென்ட் விலை, 2.5 சதவீதம் குறைந்து இருந்தது.இந்நிலையில், பிப்ரவரியில், சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள், விலையை உயர்த்தியுள்ளன. தென் பிராந்தியத்தில் தான், சிமென்ட் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
சென்னை
ஆந்திர மாநிலம், ஐதராபாதில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, அதிகபட்சமாக, 77 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது, சென்னை மற்றும் பெங்களூரில், முறையே, 62 ரூபாய் மற்றும் 52 ரூபாய் உயர்ந்துள்ளது.
மேற்கு பிராந்தியத்தில், ஒரு மூட்டை சிமென்ட் விலையில், 26 ரூபாய் வரை உயர்த்தப் பட்டுள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு பிராந்தியங்களில், இந்த விலை உயர்வு, முறையே, 12, 7, 4 ரூபாய் என்ற அளவில் உள்ளது.ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், தற்போது தான், சிமென்ட் விலை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.சில்லரை பணவீக்கம்குறைந்துள்ளதால், சிமென்ட் நிறுவனங்களின்தயாரிப்புச் செலவு குறைந்துள்ளது. மின்சாரம், எரிபொருள், சரக்கு போக்குவரத்து செலவுகள் குறைந்துள்ளன.
இந்நிலையில், கட்டுமான துறை சூடுபிடித்துள்ளதால், சிமென்டிற்கான தேவையும் அதிகரித்துள்ளது.இத்தகைய சூழலில், சிமென்ட் விலை உயர்த்தப்பட்டதால், தயாரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பு, நடப்பு நான்காவது காலாண்டில், 2 -– 2.5 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சிமென்ட் விலை உயர்வு, வரும் நிதியாண்டிலும் நீடிக்குமா என, தெரியாது. பொதுத் தேர்தல் நிலவரம் தான் அடுத்த, ஆறு மாதங்களுக்கான சிமென்ட் தேவையை நிர்ணயிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு தலையிட வேண்டும்
தமிழகத்தில், 50 கிலோ சிமென்ட் மூட்டை விலை, 36 – 44 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமென்ட், 350 – 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதி திட்டச் செலவுகள் உயரும்.சிமென்ட் பயன்பாட்டில், வீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் பங்கு, 65 சதவீதமாக உள்ளது. பொதுத் துறையின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தொழில் துறை திட்டங்களின் பங்கு, முறையே, 20 மற்றும் 15 சதவீதமாக இருக்கிறது.
தமிழகத்தில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான, குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிமென்ட் விலை உயர்வு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இவ்விவகாரத்தில், தமிழக அரசு தலையிட்டு, சிமென்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டபிள்யு.எஸ்., ஹபீப்தலைவர்,
‘கிரெடாய்’ சென்னை பிரிவு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|