பதிவு செய்த நாள்
18 மார்2019
06:38
ரியல் எஸ்டேட் துறைக்கான மியூச்சுவல் பண்ட் என சொல்லப்படும், ஆர்.இ.ஐ.டி., முதலீடு பற்றி ஒரு கண்ணோட்டம்.ஆர்.இ.ஐ.டி., என குறிப்பிடப்படும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை, சர்வதேச அளவில் பிரபலமான முதலீட்டு சாதனங்களில் ஒன்றாக அமைகிறது. இவை, வர்த்தக ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்து, அதன் பலனை முதலீட்டாளர்களுக்கு பிரித்தளிக்கின்றன. அந்த வகையில் இவற்றை ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான மியூச்சுவல் பண்ட் என குறிப்பிடலாம். ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான நிதி திரட்ட உதவுவதோடு, பொதுமக்களும் ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்ய இவை உதவுகின்றன.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிதிகள் போல அல்லாமல், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள், வர்த்தக ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்கின்றன. திட்டங்கள் மூலமான வருவாயை, முதலீடு செய்தவர்களுக்கு யூனிட் அடிப்படையில் டிவிடெண்டாக அளிக்கப்படுகின்றன. இவை குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதி இல்லை. வர்த்தக திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யும். 80 சதவீத தொகையை கட்டி முடிக்கப்பட்ட அல்லது வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
பொதுவாக, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய பெரிய அளவிலான தொகை தேவை என்பதால், சிறிய முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை. ஆனால், ஆர்.இ.ஐ.டி., வாயிலாக சிறிய முதலீட்டாளர்கள், யூனிட்களை வாங்கி முதலீடு செய்வது சாத்தியம். இந்தியாவை பொறுத்தவரை, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, 2014ம் ஆண்டு ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கான இரண்டு வகை அறக்கட்டளைகள் அமைத்துக்கொள்ள அனுமதி அளித்தது. இதற்கான நெறிமுறைகள் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டன.இந்நிலையில், இந்த பிரிவில் முதல் திட்டமாக, எம்பஸி ஆபீஸ் பார்க்ஸ் ஆர்.இ.ஐ.டி., பங்கு வெளியீடு அறிமுகமாகிறது. இதற்கான வரவேற்பை பொறுத்து, மேலும் திட்டங்கள் அறிமுகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரைச்சேர்ந்த எம்பஸி ஆர்.இ.ஐ.டி., தன் முதல் பங்கு வெளியீட்டை இன்று வெளியிடுகிறது. வரும், 20ம் தேதி வரை முதலீடு செய்யலாம். முதல் கட்டமாக, 4,750 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சாதாரண முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்கலாம். இதன் யூனிட்கள் பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும். ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் என்று சொல்லப்படுவதால், இந்த வெளியீடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.வர்த்தக ரியல் எஸ்டேட் துறைக்கான முதலீட்டு வாய்ப் பாக ஆர்.இ.ஐ.டி., அமைகிறது. வர்த்தக கட்டடங்கள், மருத்துவமனைகள், தொழில் பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய அல்லது இவற்றுக்கு நிதி திரட்ட இவை பயன்படும். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் திட்டங்களில் இருந்து பகுதியளவு வெளியேறி, அவற்றின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதும் இதன் மூலம் சாத்தியமாகும்.
வைப்பு நிதி மற்றும் அரசு பத்திர முதலீடுகளுக்கு ஒரு மாற்றாக இவை அமையலாம் என, கருதப்படுகிறது. அதே நேரத்தில் சமபங்கு முதலீடு போன்ற பலனை அளிக்கலாம். 2 லட்சம் ரூபாய் குறைந்த பட்ச முதலீட்டில் இதில் பங்கேற்கலாம். இந்த பிரிவில் முதல் வகை வாய்ப்பு என்பதால், முதலீட்டாளர்கள் இதில் சிறிய அளவு முதலீடு செய்து கிடைக்கும் பலனை ஆய்வும் செய்து, அதன் அடிப்படையில் முதலீடு செய்யலாம் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|