பதிவு செய்த நாள்
15 ஏப்2019
00:49
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 சதவீதத்துக்குள் அடங்கியே பயணிக்கும் போது, பங்குச் சந்தையின் குறியீடுகள், தொடர்ந்து புதிய உச்சம் தொடுவது, பல முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டில், நிறுவன லாப வளர்ச்சியை பார்த்தாலும், அப்படி ஒன்றும் பிரமிப்பூட்டும் வகையில் அமையவில்லை. இந்த சூழலில் தான், நடப்பு ஆண்டு, முதலீட்டாளர்களுக்கு குறைந்த சந்தை எதிர்ப்பார்ப்புகளுடன் துவங்கியது. ஆனால், பன்னாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய முதலீடுகளை விரைவுபடுத்தவும், அதிகப்படுத்தவும் துவங்கினர்.
இன்னும் தேர்தல் முடிவுகள் தெளிவு தராத நிலையில், முதலீட்டாளர்களின் மிகையான சந்தை ஆர்வம் மேலும் கூடியுள்ளது. இதற்கான காரணங்களை புரிந்து கொள்வது அவசியம். உலக பொருளாதார வளர்ச்சி மீண்டும் மந்தம் காணும் சூழலில், இந்திய பொருளாதார வளர்ச்சி சூழல் பிரகாசமாக தெரிகிறது. அதற்கான உட்கட்டமைப்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்டு விட்டன. வரும் ஆண்டுகளில், பண வீக்கம் கட்டுக்கோப்பாக அமையக்கூடும்.
அரசின் வருமான வளர்ச்சி நிச்சயம் வேகம் பிடிக்கும்.தனியார் முதலீடுகள் மந்த நிலை விலகி, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.சேவை தொழில்கள்கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி கண்டிருந்தாலும், வரும் ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு வாய்ப்புகள் அதிகம் பெருகும். நமக்கு சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை, 10 பில்லியன் டாலர் குறைந்தது, உற்பத்தி பெருக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதன் அறிகுறி.
இந்த சூழல் வரும் ஆண்டுகளில் மேலும் வலுவடைந்து, நம் உற்பத்தி பொருளாதாரம், சேவை பொருளாதாரத்திற்கு போட்டியாக உருமாறும். ஆக, பொருளாதார சூழல் உறுதியாக முன்னேற்றம் காணும் என்பதே உலக முதலீட்டாளர்களின் பார்வை. இதன் பிரதிபலிப்பே, நம் சந்தையில் தென்படும் முதலீட்டு ஆர்வமும், அவசரமும்.வரும் ஆறு வாரங்களில், அரசியல் சார்ந்த பார்வைகள் மாறலாம். அவற்றை ஊகிப்பது மிக கடினம்.
ஆனால், பொருளாதார பார்வைகள் அரசியல் சார்ந்து அதிகம் மாறாது என்றே தோன்றுகிறது. ஆட்சியாளர் யாராக இருந்தாலும், சந்தை மயமான பொருளாதார கொள்கைகள் தொடர்வது உறுதி. இன்னும் சொல்லப் போனால், கூட்டாட்சி அரசு அமைந்தால், அதன் நிர்ப்பந்தங்கள் பொருளாதார சீர்திருத்தங்களை துரிதப்படுத்தும்.பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், ஆட்சியாளர்களால் தங்கள் அரசியல் முதலை கூட்டிக்கொள்ள முடியும் என்று மோடி வழிகாட்டியுள்ளார்.
எந்த அரசு அமைந்தாலும், அந்த வழியில் இருந்து மாறாது என்பது உறுதி.மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், சீர்திருத்த வேகம் கடந்த ஆட்சியை விட அதிகமாக இருக்கும். இந்த புரிதல் தான், முதலீட்டு அவசரத்தை சந்தையில் புழங்கச் செய்துள்ளது.
இந்த தேர்தலில் யார் வருவர் என்ற கேள்வியை, பூவா -- தலையா முடிவு போல சந்தை பார்க்கிறது.பூ விழுந்து, மோடி தலைமையில் மீண்டும் அரசு ஏற்பட்டால், சந்தைக்கு பெரும் சாதகம். ஒருவேளை தலை விழுந்து, மோடி அல்லாத வேறு ஒருவர் தலைமையில் ஆட்சி அமைந்தால், அதிக பாதகம் இல்லை என்பதே சந்தையின் நிலைப்பாடு.இருந்தாலும், மோடி மீது சந்தை அதிக நம்பிக்கை வைத்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. சந்தையை பொறுத்தவரை அதன் ஓட்டுகளின் திசை மிகத் தெளிவு.
ஷியாம் சேகர் முதலீட்டு ஆலோசகர் பங்கு சந்தை
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|