பதிவு செய்த நாள்
15 டிச2019
23:49
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியில், கடந்த வாரம், 280 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் முடிவுற்றது. ஆரம்ப நாட்களில் சரிந்து வர்த்தகம் ஆன போதிலும், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் சந்தை உயர்ந்து வர்த்தகம் ஆனது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நிகழ்வுகளின் தாக்கம், நம் சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றுவரும் வர்த்தகப் போர் குறித்து, முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுள்ளது.
இதில் குறிப்பிடும்படியாக, அமெரிக்காவிடமிருந்து, விவசாயப் பொருட்களை, சீனா இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இவ்வாறாக, இரு நாடுகளுக்குமிடையே சுமுகப் போக்கு நிலவும் என்ற எதிர்பார்ப்பில், சர்வதேச சந்தையில், அனைத்து பங்குச் சந்தைகளும் உயர்ந்து வர்த்தகம் ஆகின. அதன் தாக்கம் நம் சந்தையிலும் பிரதிபலித்தது.
மேலும், ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான, கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து நிலவி வந்த அரசியல் சிக்கல்கள் தீர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுவடைந்துள்ளது. இது, சர்வதேச சந்தையில் சாதகமான போக்கிற்கு வழிவகுத்தது.
கடந்த வாரம் வெளியான, நாட்டின் பணவீக்க விகிதம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி குறியீடுகள், எதிர்பார்த்ததைவிட சரிவடைந்த நிலையிலேயே வெளிவந்தன. நவம்பர் மாதத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம், 5.5 சதவீதமாக இருந்தது. மேலும், சில்லரை பணவீக்க விகிதம், அக்டோபர் மாதத்தில், 4.62 சதவீதமாகவும், செப்டம்பர் மாதத்தில், 3.99 சதவீதமாக இருந்தது.
உணவு பணவீக்க விகிதம், அக்டோபர் மாதத்தில், 7.8 சதவீதமாகவும், முந்தைய செப்டம்பர் மாதத்தில், 5.1 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.பி., எனும், இந்திய தொழில்துறை வளர்ச்சி குறியீடு, அக்டோபர் மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும், 3.8 சதவீதம் சரிந்திருந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 41 ஆயிரம் புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, 12 ஆயிரம் புள்ளிகளையும் கடந்த நிலையில், பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த பங்குகள், எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் வர்த்தகமாகி வருகின்றன.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, ஆளும் மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வளர்ச்சியை ஊக்குவிக்க, பல்வேறு பொருளாதார சலுகைகளை மேலும் அறிவிக்க கூடும் என்று எதிர்பார்ப்பும், சந்தையில் பங்குகள் விலை உயர, வழிவகுத்தது.இந்த வாரத்தைப் பொறுத்தவரை, நிப்டி ரெசிஸ்டென்ஸ், 12135 மற்றும் 12190; சப்போர்ட், 11985 மற்றும் 11910.
முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|