பதிவு செய்த நாள்
23 பிப்2020
05:16
மும்பை: பழைய வாகனங்களை அழித்து அகற்றும் வணிகம், ஆண்டுக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையாக மாறும் என்கின்றனர், நிபுணர்கள்.
பழைய வாகனங்களை சாலைகளிலிருந்து அகற்றுவதற்கான, பழைய வாகன கழிவு கொள்கை முழுமையானதாக இருக்கும்பட்சத்தில், வாகனங்களை அழித்து அகற்றும் சந்தை, ஆண்டுக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ளதாக மாறும் என்றும், புதிய வேலைவாய்ப்புகளும் பெருகும் என்றும் கருதப்படுகிறது.
பழைய வாகனங்களை, சாலை ஓட்டத்தில் இருந்து அகற்றுவதால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்; புதிய வாகன விற்பனையை துாண்டுவதாகவும் அது அமையும் என்றும், இத்துறையைச் சேர்ந்தவர்கள் கணிக்கின்றனர்.விரைவில், இந்த பழைய வாகன கழிவு கொள்கை, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வர உள்ளதாக, சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.வாகனங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உருக்கு, செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்களை, மறு சுழற்சி செய்வதன் மூலம், இவற்றை இறக்குமதி செய்வது குறையும் என அரசு கருதுகிறது.மேலும், மிகவும் பழைய வாகனங்களை சாலை ஓட்டத்திலிருந்து அப்புறப்படுத்துவதால், காற்று மாசு குறையும் எனவும் அரசு கருதுகிறது. மேலும், கச்சா எண்ணெய் தேவையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், இந்த வாகன அகற்றம் குறித்து, பலரும் பல்வேறு வகையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.வர்த்தக வாகனங்களுக்கு மட்டுமின்றி, இருசக்கர வாகனங்கள் வரையிலான அனைத்து வகை பழைய வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான், இந்த கொள்கை முழுமை பெற்றதாக இருக்கும் என, சில வாகன அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், வாகனங்களை அதன் வயதை வைத்து கணக்கிடாமல், அதன் ஓட்டத்தை வைத்து கணிக்க வேண்டும் என்றும்சில அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.எச்.டி.எப்.சி., வங்கி, 15 ஆண்டுகளாகிவிட்ட காரையும், 10 ஆண்டுகளாகிவிட்ட இருசக்கர வாகனங்களையும் சாலையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிறது.மேலும், வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, அது எவ்வளவு துாரம் பயணித்துள்ளது என்பதை வைத்தோ அல்லது ஏழு முதல் எட்டு ஆண்டுகள் கழித்தோ அதை அப்புறப்படுத்த வகை செய்ய வேண்டும் என்கிறது,
இவ்வங்கி.இது குறித்து, ‘டெய்ம்லர்இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்தியகம் ஆர்யா கூறியதாவது:அரசு, மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவது, பழைய வாகனங்களை அழிக்க கொடுத்து, புதிய வாகனங்களை வாங்கும்போது, கணிசமான நிதிச் சலுகைகளை வழங்க வேண்டும்.இரண்டாவது, புதிய வாகனங்களை வாங்க விரும்பாதவர்களிடமிருந்து, பழைய வாகனங்களை வாங்குவதற்கு, பழைய வாகன சந்தையை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, வர்த்தக வாகனங்களின் ஆயுளை, 10 ஆண்டுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்
.நன்மைகள்
பழைய வாகன கொள்கை நன்றாக வரையறுக்கப்பட்டால், அடுத்த நிதியாண்டில், 90 லட்சம் வாகனங்கள் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்படும். 2025 நிதியாண்டில், 2.80 கோடி வாகனங்கள் கழிக்கப்படும். கரியமில வாயு உமிழ்வு, 17 சதவீதம்குறையும். ‘பாரத் ஸ்டேஜ் – 2’ மற்றும் 3 வாகனங்களில் பாதி அப்புறப்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு,80 லட்சம் டன் எண்ணெய் சேமிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|